ரோகிணி ஐ.ஏ.எஸ்., சேலம் மாவட்ட ஆட்சியராக செயல்பட்டு வருபவர்! பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளில் அவரது தலையில் ஒருவர் செருப்பு வைக்க முயன்ற நிகழ்வு நடந்தது.
ரோகிணி ஐ.ஏ.எஸ்., மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். 2008-ம் ஆண்டு பேட்ச், ஐ.ஏ.எஸ். அதிகாரி இவர்! வெளிமாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், தமிழை பேசக் கற்றுக்கொண்டு பொதுமக்களிடம் எளிமையாக உரையாடுவதால் பணிபுரிந்த இடங்களில் மக்களின் ஆதரவைப் பெற்றவர்!
ரோகிணி ஐ.ஏ.எஸ். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சேலம் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார். திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்து வந்த காலகட்டங்களில் தனது திருவாரூர் மாவட்ட ஆட்சியராக சிறந்த ஐ.ஏ.எஸ். ஒருவரை நியமனம் செய்து பணிகளை துரிதப்படுத்துவது வழக்கம்! அதே ரீதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டத்திற்கு ரோகிணி ஐ.ஏ.எஸ்.ஸை பணியமர்த்தி இருக்கிறார்.
ரோகிணி ஐ.ஏ.எஸ்., இன்று சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார். அவருடன் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமாரும் இருந்தார். அப்போது 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் கோரிக்கை மனுவுடன் அங்கு வந்தார். அவர் கலெக்டரிம் மனுவை கொடுத்தார்.
கலெக்டர் ரோகிணி அந்த மனுவை படித்துக் கொண்டிருந்தார். திடீரென்று மனு கொடுத்தவர் தன் காலில் மாட்டியிருந்த செருப்பை கழற்றி கலெக்டர் தலையில் வைக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த கலெக்டர் ரோகிணி, பதற்றத்துடன் அங்கிருந்து நகர்ந்தார். ஆனாலும் சளைக்காத அந்த நபர் அங்கிருந்த மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார் தலையில் செருப்பை வைத்தார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கலெக்டர் ரோகிணி மீது செருப்பை வைக்க முயன்றதாக கைதானவர்!
கலெக்டர் ரோகிணி மீது செருப்பை வைக்க முயன்றவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். பின்னர் அவரை சேலம் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், அவர் தன் பெயர் ஆறுமுகம் என்றும், தான் ஒரு டாக்டர் என்றும் கூறினார். ஆனால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடிப்பதாக போலீஸார் கூறினர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.