பாளையங்கோட்டை ரோஸ் மேரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் நேரில் ஆய்வு செய்தார்.
பாளையங்கோட்டை ரோஸ் மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கியப் பள்ளிகளில் ஒன்று! பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே இந்தப் பள்ளி அமைந்திருக்கிறது. 3 பிளாக்களாக அமைந்துள்ள இந்தப் பள்ளியில் சுமார் 3000 மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள்.
ரோஸ் மேரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று (ஜூலை 18) வழக்கம்போல வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது, ஐந்தாம் வகுப்பின் ஒரு பிரிவில் திடீரென தீப்பற்றியது. அங்கு ஸ்மார்ட் போர்டு வெடித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அங்கிருந்து மாணவ, மாணவிகள் அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
ரோஸ் மேரி பள்ளியின் அருகில் உள்ள பிளாக்களில் இருந்தும் முழுமையாக மாணவ, மாணவிகள் வெளியேறினர். மொத்த மாணவ, மாணவிகளும் ஒரே நேரத்தில் வெளியேறியதால் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது.
பாளையங்கோட்டை தீயணைப்பு படைக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தார்கள். எனினும் தீப்பற்றிய அறையில் இருந்து புகை வந்தபடியே இருந்தது. நீண்ட நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.
தீ விபத்தை தொடர்ந்து, மாணவ மாணவிகள் அனைவரும் மதியமே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குறிப்பிட்ட பிளாக்கிலும், அதன் அருகிலும் செயல்பட்ட வகுப்புகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருக்கிறது.
ரோஸ் மேரி பள்ளி தீ விபத்து குறித்து தெரிய வந்ததும், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் மற்றும் கல்வி அதிகாரிகள் அங்கு வருகை தந்தனர். தீ விபத்து குறித்து அவர்கள் விசாரித்தனர். தீயணைப்பு தடுப்பு நடவடிக்கைகள் பள்ளியில் முறையாக செய்யப்பட்டிருக்கிறதா? என்பது தொடர்பாகவும் ஆய்வு நடத்தி வருகிறார்கள்
தீயணைப்பு முன் ஏற்பாடுகளில் குறைகள் இருந்தால் பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அதிகாரிகள் கூறினர்.