/indian-express-tamil/media/media_files/2025/04/24/hNZ6w9ULhc6guWHIlyRG.jpg)
திருச்சி ராமலிங்க நகர் பகுதியில் உள்ள ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டியின் ஆண்டு விழாவில் பன்னாட்டு ரோட்டரி இயக்குனர் (தேர்வு) முருகானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி நிர்வாகிகளின் சேவையை பாராட்டி ரூபாய் 5 லட்சம் நிதி வழங்கி கௌரவித்தார்.
தொடர்ந்து, ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி வளாகத்தில் முருகானந்தம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்; ரோட்டரியின் உலகளாவிய தொலைநோக்கு, வரவிருக்கும் "லீட் 2025" தலைமைத்துவ மாநாடு மற்றும் சிகாகோவில் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் ரோட்டரி இந்தியா தலைமைத்துவ மாநாடு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
1905-ல் தோற்றுவிக்கப்பட்ட பன்னாட்டு ரோட்டரியின் முக்கிய மதிப்புகளில் ஒன்று தலைமைப்பண்பு வளர்த்தல். இதனை கொண்டாடும் விதமாக "லீட் 2025" என்ற பெயரில் மிக பிரம்மாண்டமான ரோட்டரி இந்தியா தலைமைத்துவ மாநாடு வரும் ஆக.22 முதல் 24-ம் தேதி வரை 3 நாள் நிகழ்வாக சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் இந்தியா, இலங்கை, நேபால், பூட்டான், பங்களாதேஷ் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளிலிருந்து 5000 ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இம்மாநாட்டின் துவக்க விழாவிற்கு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதன்மை விருந்தினராகவும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கௌரவ விருந்தினராகவும் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டின இறுதி நாள் விழாவின் சிறப்பு விருந்தினராக இந்திய ஜனாதிபதியை அழைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
பிரேசிலைச் சேர்ந்த பன்னாட்டு ரோட்டரி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாரியோசீசா மார்டினஸ்டிகமார்கோ, பல முன்னாள் மற்றும் தற்போதைய பன்னாட்டு ரோட்டரி இயக்குநர்கள் மற்றும் தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.
வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, 2029 அல்லது 2031 ஆம் ஆண்டுகளில் ரோட்டரி சர்வதேச மாநாட்டை நடத்த இந்தியா அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்பட்டுள்ளது. ரோட்டரியின் 120 ஆண்டுகால வரலாற்றில் இந்த மதிப்புமிக்க உலகளாவிய நிகழ்விற்கு இந்தியா பரிசீலிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த அறிவிப்பு இந்திய ரோட்டேரியன்களிடையே மிகுந்த உற்சாகத்தையும், பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தியா தோந்தெடுக்கப்பட்டால், இந்த மாநாடு உலகம் முழுவதிலுமிருந்து 25,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை ஒனறிணைக்கும். இது நமது பிராந்தியத்தில் ரோட்டரியின் தெரிவுநிலையையும், செல்வாக்கையும் கணிசமாக அதிகரிக்கும்.
இந்தியா தனது முதல் ரோட்டரி கிளப்-ஐ 1920-ம் ஆண்டு கல்கத்தாவில் தொடங்கியது. 4 இந்தியர்கள் பன்னாட்டு ரோட்டரியின் தலைவர்களாக பதவி வகித்துள்ளனர். இந்தியாவில் 44 ரோட்டரி மாவட்டங்கள் உள்ளன. 1.7 லட்சம் உறுப்பினாகளை கொண்டு, 4,800-க்கும் மேற்பட்ட சங்கங்கள் உள்ளன. இதன் மூலம் உறுப்பினர் சேர்க்கை மற்றும் ரோட்டரி அறக்கட்டளைக்கு பங்களிப்பு அடிப்படையில் உலகளவில் ரோட்டரியின் இரண்டாவது பெரிய ஆதரவாளராக இந்தியா திகழ்கிறது.
உலகளவில் 34 ரோட்டரி மண்டலங்கள் உள்ளன. மண்டலங்கள் 4,5,6 மற்றும் 7 இந்தியா, நேபாளம், இலங்கை, பூட்டான், மாலத்தீவுகள் மற்றும் வங்காளதேசத்தை ஆகிய நாடுகளை உள்ளடக்கியது. குறிப்பாக மண்டலம் 5 தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கையை உள்ளடக்கியது.
தமிழ் நாட்டில் மட்டும் 1000 ரோட்டரி சங்கங்கள் உள்ளன. உறுப்பினர் வளாச்சி மற்றும் அவாகளுடைய முழுமையான ஈடுபாடு மற்றும் ரோட்டரிஅறக்கட்டளைக்கு (TRF) குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் ஆகியவற்றுடன், தமிழ்நாடு விரைவில் ஒரு தனி மண்டலமாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது.
"Say YES to Rotary" என்ற தாரகமந்திரத்தை குறிக்கோளாகக் கொண்டு, RI இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் 2025-26 ரோட்டரி ஆண்டில் அனைத்து ரோட்டேரியன்களை நன்மைக்காக ஒன்றுபட அழைக்கும் பணியில், புதிதாகப் பொறுப்பேற்று உள்ள தலைவர் மரியோவுடன் இணைந்து செயல்படுவேன்.
புதிய சங்கங்களை தோற்றுவித்து உறுப்பினர்கள் எண்ணிக்கையை பன்மடங்காக உயர்த்துவதும், ரோட்டரி அறக்கட்டளைக்கு மிகுதியான பங்களிப்புகளை திரட்டுவதும், சேவைத் திட்டங்களின் தாக்கத்தையும், அவற்றின் பரவலையும் அதிகரிக்க அரசு அமைப்புகள் மற்றும் CSR முயற்சிகளுடன் சக்திவாய்ந்த கூட்டாண்மைகளை உருவாக்குதலும், போலியோவை முற்றிலும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிக்கான மேம்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் 1 பில்லியன் மக்களைச் சென்றடையவும் முயற்சிகளை மேற்கொண்டு இந்தியாவை 2030ம் ஆண்டில் பன்னாட்டு ரோட்டரியில் முதல் இடம் வகிக்க பணியாற்றுவேன் எனப் பேசினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.