ரவுடி பேபி சூர்யா வீடியோக்களை பார்த்து நீதிபதிகள் அதிர்ச்சி
குண்டர் சட்டத்தில் கைதானதை எதிர்த்து ரவுடி பேபி சூர்யா தொடர்ந்த வழக்கில் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
Advertisment
மதுரையை சேர்ந்தவர் சுப்புலட்சுமி என்கிற சூர்யா (35). ரவுடி பேபி என்ற பெயரில் டிக் டாக் செய்து பிரபலமானவர். டிக் டாக் செயலி தடை செய்த பிறகு, யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். இவரது நண்பர் மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்த்த சிக்கந்தர்ஷா என்கிற சிக்கா (45).
ரவுடி பேபி சூர்யா
இந்நிலையில், கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடத்தி வரும் யூடியூப் சேனலை ஆபாசமாக விமர்சித்த புகாரின் அடிப்படையில், சூர்யா மற்றும் சிக்கந்தர்ஷா ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் கைதாகினர்.
Advertisment
Advertisements
பின்னர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் சூர்யாவையும், சிக்கந்தர்ஷாவையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து ரவுடி பேபி சூர்யா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி என் பிரகாஷ் மற்றும் ஆர் எம் டி டீக்காரமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், பெண்களுக்கு எதிராக சுப்புலட்சுமி ஆபாசமாக பேசியுள்ளார். அந்த வீடியோக்களை பார்த்து நீதிபதிகள் முடிவெடுக்க வேண்டும் எனக்கூறி, லேப்டாப் மூலம் நீதிபதிகளிடம் டிக்டாக் சூர்யா பேசும் காட்சிகளை காண்பித்தார்.
டிக்டாக் சூர்யாவின் பேச்சுகளை கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், இந்த வழக்கில் முகாந்திரம் உள்ளதாகவும், தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி, விசாரணையை ஆறு வாரத்திற்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“