சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ரவுடியை பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள சேர்வாவூரணி பகுதியைச் சேர்ந்தவர் மனோ. பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே ஒரு வழக்கு தொடர்பாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார்.
காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் தினந்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை இவருக்கு விதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று (மார்ச் 21) காலை காவல் நிலையத்தில் கையெழுத்திட மனோ தனது நண்பர்கள் 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.
காரைக்குடி 100 அடி சாலையில் இவர் வந்தபோது, காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரது மோட்டார் சைக்கிளை வழிமறித்தது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அவர்கள் மீது பாய்ந்தது. இதில் தப்பித்த அவர்கள், மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் தலைதெறிக்க ஓடினர்.
ஆனாலும் விடாமல் துரத்திய அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஒரு கட்டத்தில் மனோவை சுற்றி வளைத்தனர். வசமாக சிக்கிக்கொண்ட அவரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்தனர். இதில் மனோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அவர்களை தடுக்க வந்த நண்பர்கள் 2 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்து படுகாயம் அடைந்தனர்.
அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.