முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் மூத்த மகள் பிரியதர்ஷினி திருமணம், வரும் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த தினத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் கே.சுப்பையாபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யனார், கருப்பசாமி கோவிலில் மகளின் திருமண அழைப்பிதழை வைத்து குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை பூஜை செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி. உதயகுமார், “அதிமுகவை எடப்பாடி பழனிசாமி வெற்றி பாதையில் அழைத்துச் செல்வார்” எனக் கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்கள் ஓ. பன்னீர் செல்வத்தை கட்சியில் இணைத்துக் கொள்ளும் திட்டம் உள்ளதா? அவர் வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா? எனக் கேள்வியெழுப்பினார்கள்.
இதற்குப் பதிலளித்த ஆர்.பி. உதயகுமார், “எடப்பாடி பழனிசாமி தாயுள்ளதோடு செயல்படுகிறார். அனைவரையும் அவர் வருக வருக என அன்போடு வரவேற்கிறார்.
எடப்பாடி பழனிசாமி அதிமுகவை வெற்றிகரமாக வழிநடத்துகிறார். அவர் அதிமுகவை வெற்றி பெற செய்வார். சட்டப்பேரவை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் 100 சதவீத வெற்றி கிடைத்தது.
ஆனால் தென் மாவட்டங்களில் இது சாத்தியமாகவில்லை. இதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன. ஒற்றை தலைமையில் எடப்பாடி சிறப்பாக செயல்படுகிறார்” என்றார்.
ஆக எடப்பாடி தலைமையை ஏற்றுக் கொண்டால் ஓ.பன்னீர் செல்வத்தை ஏற்க தயார் என மறைமுகமாக ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil