/indian-express-tamil/media/media_files/2025/09/30/chennai-2025-09-30-10-19-39.jpg)
ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்... பாலிவுட் துணை நடிகர் கைது!
சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 35 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ போதைப்பொருளுடன் பாலிவுட் துணை நடிகர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் புலனாய்வு துறையினர் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது, பாலிவுட்டில் வெளியான ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’ திரைப்படத்தில் துணை நடிகராக நடித்த நடிகரிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அவரது பெட்டியின் அடிப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போது அதில் பிளாஸ்டிக் பை ஒன்றில் வெள்ளை நிற பவுடர் போன்று இருந்துள்ளது.
இதை அதிகாரிகள் சோதனை செய்த போது அது போதைப்பொருள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தான் போதைப்பொருள் கடத்தவில்லை என்று கூறிய அந்த நடிகர் கம்போடியாவில் இருந்து சென்னைக்கு சிங்கப்பூர் வழியாக வந்துள்ளார்.
அப்போது கம்போடியாவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த பெட்டியை கொடுத்ததாக கூறியுள்ளார். மேலும், அந்த பெட்டியை பெற்றுக் கொள்ள சென்னையில் ஒருவர் வருவார் என்றும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து, துணை நடிகரை கைது செய்த போலீசார், அவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளாரா? என்றும் கடந்த காலத்தில் இவர் போதைப்பொருள் கடத்தியுள்ளாரா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு வாரங்களில் சென்னை விமான நிலையத்தில் இரண்டு முறை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செப்டம் 16-ஆம் தேதி எத்தியோபியாவிலிருந்து வந்த கென்யாவைச் சேர்ந்த ஒருவர் 2 கிலோ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து செப்டம்பர் 1-ஆம் தேதி சாக்லேட் கேன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5.6 கிலோ போதைப்பொருளை சென்னை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.