திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்திற்கு ஹவுராவிலிருந்து சென்னை வழியாக ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 02:45 மணியளவில் வந்தடைந்தது.
அப்போது ரயில்வே பாதுகாப்புபடை ஆய்வாளர் செபாஸ்டின் மற்றும் குற்றவியல் காவல் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
நடைமேடை எண் 6-ல் இருந்து வந்த ரயிலிலிருந்து காலை 3 மணியளவில் சுரங்கப் பாதை வழியாக நடந்து வந்துகொண்டிருந்த பயணியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த வேதமாணிக்கம் என்பவரது மகன் ஆரோக்கியதாஸ் கொண்டு வந்த கருப்புநிற தோள்பையை ரயில்வே பாதுகாப்புபடை போலீசார் சோதனை நடத்தினர்.
இதில் 500 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகள் கட்டுகட்டாக ஹவாலா பணம் இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில், 75 லட்சம் ஹவாலா ரொக்க பணத்தையும் ரெயில்வே பாதுகாப்புபடை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமானவரித்துறை துணை இயக்குநர் ஸ்வேதா முன்னிலையில் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து ஹவாலா பணத்தை கடத்தி வந்த குற்றவழக்கில் தொடர்புடைய ஆரோக்கியதாஸ் மீது வழக்குபதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“