சென்னை திருவான்மியூரில் மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுக்கும் வரை இங்கு தான் இருப்பேன். ஊழல் பெருச்சாளிகள் 35 அமைச்சர்கள் 2026-ல் சிறைக்குச் செல்வதை பார்ப்பதற்கு நான் இருப்பேன். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்” என்று காட்டமாகப் பேசினார்.
இந்நிலையில், அண்ணாமலையின் இந்தப் பேச்சுக்கு தி.மு.க தலைவர்கள் பலரும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில், அண்ணாமலையின் அறிவாலயம் தொடர்பான பேச்சுக்கு தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற ஆர்.எஸ்.பாரதியிடம் அண்ணாமலையின் பேச்சு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அறிவாலயத்தை புடுங்குவேன் என்று சொன்னவர்கள் எல்லாம் தூள் தூளாகி போகினா். அவர்கள் காணாமல் போய்விட்டனா். அண்ணாமலையும் தற்போது அந்த வரிசையில் இடம் பெற இருக்கிறார். அறிவாலயத்தில் உள்ள ஒரு புல்லை கூட அண்ணாமலையால் பிடுங்க முடியாது.
தி.மு.க-வை அழிப்பேன், ஒழிப்பேன் என்று கூறிய மொத்த பேரும் அழிந்து தான் போகினா். இதுதான் வரலாறு. இதுபற்றி அண்ணாமலைக்கு தெரிய வாய்ப்பு இல்லை. அண்ணாமலை பேச்சால் தி.மு.க தொண்டர்கள் எழுச்சி தான் பெறுவார்கள். சோர்வடைய மாட்டார்கள். 2026-ல் ஊழல் பெருச்சாளிகள் சிறைக்கு செல்வார்கள் என அவர் கூறி உள்ளார். 2026-ல் இல்லை, 3026-ல் கூட அது நடக்காது.
தி.மு.க-வுக்கு ஒரு சோதனை என்றால் கலைஞர் சொல்வார், 'தூங்கினால் என் தொண்டன் கும்பகர்ணன். எழுந்து நின்றால் இந்திரஜித்' என்பார். தி.மு.க-கார்கள் அனைவரும் இந்திரஜித் ஆவார்கள்" என்று ஆர்.எஸ் பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.