scorecardresearch

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் தள்ளிவைப்பு; நிபந்தனைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திட்டம்!

சுற்றுச்சுவர் உள்ள மைதானத்திற்கு அணிவகுப்பு நடந்த வேண்டும் என்ற நிபந்தனையால் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிப்பு; உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டம்

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் தள்ளிவைப்பு; நிபந்தனைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திட்டம்!

தமிழகம் முழுவதும் 44 இடங்களில் பேரணி நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தள்ளிவைக்கப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. காவல்துறை அனுமதி வழங்க மறுத்ததையடுத்து, காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், நவம்பர் 6ஆம் தேதியன்று ஊர்வலத்தை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட்டது. மேலும் ஊர்வலத்திற்கான நிபந்தனைகளை விதித்து, அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இதையும் படியுங்கள்: ஆரஞ்சு பால் விலை இன்று முதல் உயர்வு: ஆவின் நிறுவனம் அறிவிப்பு

ஆனால் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறி, காவல்துறைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தப்போது, உளவுத்துறை அறிக்கையின் படி கடலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், 23 இடங்களில் உள்ளரங்கில் கூட்டம் நடந்த முன்வந்தால் அனுமதி வழங்கப்படும் என்றும், 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்காத ஆர்.எஸ்.எஸ் அனைத்து இடங்களிலும் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. இதனையடுத்து உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்த பின்னர், உத்தரவு பிறப்பிக்கப்படும் என வழக்கை வெள்ளிக்கிழமைக்கு (04.11.2022) நீதிபதி ஒத்திவைத்தார். இதன்படி, வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அருமனை மற்றும் நாகர்கோவில் ஆகிய 6 இடங்களை தவிர, ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள 3 இடங்களையும் சேர்த்து, தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அமைதியான முறையில் அணிவகுப்பு மேற்கொள்ள நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க உத்தரவிட்டார்.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 44 இடங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டங்களை விளையாட்டு மைதானங்கள் அல்லது கூட்ட அரங்குகளில் நடத்த வேண்டும். இந்த கூட்டத்துக்கு செல்வோர் சொந்த வாகனங்களில், பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் செல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த ஒரு இடையூறும் ஏற்படுத்தக்கூடாது.

பிற மதம், சாதி குறித்து எந்த ஒரு வெறுப்பு கோஷங்களை எழுப்பவோ, பாடல்களை பாடவோ கூடாது. மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசக்கூடாது. இந்திய இறையாண்மைக்கும், தேச ஒற்றுமைக்கும் எதிராக செயல்படக்கூடாது. அணிவகுப்பின்போது மதம், மொழி, கலாசாரம் ஆகியவைகளுக்கு எதிராக எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாது.

லத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு வரக்கூடாது. கூம்பு வடிவ ஒலி பெருக்கியை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால், அதனால் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதத்துக்கு உரிய இழப்பீடு வழங்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் மீறப்பட்டால், அவர்கள் மீது காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சுவர் உள்ள மைதானத்திற்குள் பேரணி நடத்த வேண்டும் என்ற நிபந்தனையால் அணிவகுப்பை தள்ளி வைக்க ஆர்.எஸ்.எஸ் முடிவு செய்துள்ளது.

மேலும், பேரணி சுற்றுச்சுவர் உள்ள மைதானத்தில் நடத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற நிபந்தனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஆர்.எஸ்.எஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Rss rally adjourned in tamilnadu due to high court conditions

Best of Express