Advertisment

தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி - ஐகோர்ட் உத்தரவு

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தமிழகத்தில் நவம்பர் 6-ம் தேதி 44 இடங்களில் பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil news

Tamil news updates

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நவம்பர் 6-ம் தேதி தமிழகத்தில் 44 இடங்களில் பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்துள்ளது.

Advertisment

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பல ஆண்டுகளாக தமிழகத்தில் பேரணி நடத்த முயற்சி செய்து வருகிறது. இதற்கு முன் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கவில்லை. நீதிமன்றத்திலும் தமிழக அரசின் வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

ஆனால், தற்போது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நவம்பர் 6ம் தேதி தமிழகத்தில் 44 இடங்களில் பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தில் கடந்த அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பேரணி நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், தமிழகத்தில் குறிப்பிட்ட 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

ஆனால், தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில், பேரணி நடத்த அனுமதி வழங்க முடியாது என்று தமிழக காவல்துறை உயர் நீதிமன்றத்தில் பதிலளித்தது.

இதனால், சென்னை உயர் நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ் பேரணியை நவம்பர் 6ம் தேதி நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டது. ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த வருகிற அக்டோபர் 31ம் தேதிக்குள் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என்று நீதிபதி இளந்திரையன் எச்சரிக்கை தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு, ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதியளிக்க மாவட்ட எஸ்.பி.களுக்கு டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்பினார்.

இதையடுத்து, “கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டது. மற்ற இடங்களில் அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால், உளவுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உளவுத்துறையினை காரணம் காட்டி காவல்துறை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து தப்ப நினைக்கிறது” என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.

இதற்கு “நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர், சூழல் வேறுவிதமாக மாறியுள்ளது. 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டம் நடத்துவதாக இருந்தால் அனுமதி கொடுக்கலாம். 24 இடங்களில் அனுமதி கொடுக்க முடியாது. நவம்பர் 6ம் தேதி பல இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உளவுத்துறையின் அறிக்கையை சந்தேகம் எனவும் யூகம் என்றும் சொல்வது சரியில்லை” என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான உளவுத்துறை அறிககி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி இளந்திரையன், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்காத 47 இடங்களில் உளவுத்துறையின் அறிக்கையை ஆராய்ந்த பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி கோரி வழக்கு இன்று (நவம்பர் 4) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி அளித்துள்ளது.

கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம், அருமனை ஆகிய 6 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. இந்த 6 இடங்களைத் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய 3 இடங்கள் உள்பட 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்ட 6 இடங்களில் இயல்பு நிலை திரும்பும் வரை ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு காத்திருக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Chennai High Court Tamilnadu Rss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment