ரிமோட் வாக்குப்பதிவுமுறை தொடர்பாக நடைபெறும் கருத்துக்கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு கடிதம் அனுப்பபட்டுள்ளது.
அ.தி.மு.கவில் ஒன்றை தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே பிரச்சனை நீடித்து வருகிறது. இருவரும் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இது அ.தி.மு.கவில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இப்பிரச்சனை தொடர்பாக இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டு, இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பி.எஸ் கட்சியை விட்டு நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளராக எனக் குறிப்பிட்டு இ.பி.எஸ் அறிக்கை வெளியிட்டு வருகிறார், அதேபோல், ஓ.பி.எஸ் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
அண்மையில் இருவரும் தங்கள் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தினர். இந்நிலையில், 2 நாட்கள் முன் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள கடிதம் அனுப்பியது. அதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிட்டு அனுப்பபட்டிருந்தது. இதனால் ஓ.பி.எஸ் அணியினர் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், ரிமோட் வாக்குப்பதிவுமுறை கருத்துக் கேட்பு கூட்டம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அவர் அனுப்பிய உள்ள கடிதத்தில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு அனுப்பபட்டுள்ளது. ஜனவரி 16-ம் தேதி ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் செயல்முறை விளக்கம் தருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/