கிரானைட் முறைகேடு புகாரை விசாரித்து நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என்று அறியப்பட்ட சகாயம் ஐஏஎஸ் அக்டோபர் 2ம் தேதி விருப்ப ஓய்வு கேட்டு கடிதம் அளித்த நிலையில், தமிழக அரசு அவரை ஜனவரி 2ம் தேதி முதல் அரசுப் பணியில் இருந்து விடுவித்தது. ஆனால், தமிழக அரசு சகாயம் விரும்பிய தேதியில் ஓய்வு அளிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மதுரை கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தியதன் மூலம், நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியாக தமிழக மக்களிடையே அறியப்படுகிறார். மக்கள் பாதை என்ற அமைப்பின் பாதுகாவலராகவும் இருந்து வந்தார். சகாயம் தனது ஐஏஎஸ் பணியை முழுமையாக நிறைவு செய்து ஓய்வுக்கு பிறகு, அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சகாயம் ஐஏஎஸ், அவருடைய பணிக்காலம் இன்னும் நிறைவடையாத நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி காந்தி பிறந்தநாளில் தமிழ அரசியிடம் தனது விருப்ப ஓய்வு கடிதத்தை அளித்தார். ஆனாலு, அவர் உடனடியாக அரசுப் பணியில் இருந்து விடுவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், சகாயத்தின் விருப்ப ஓய்வு கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜனவரி 2ம் தேதி முதல் அவரை அரசுப் பணியில் இருந்து விடுவிப்பதாக புதன்கிழமை தமிழக அரசு அறிவித்துள்ளது.
நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என்று பெயர் பெற்ற சகாயம், தனது விருப்ப ஓய்வு கடிதத்தை காந்தி பிறந்த நாளில் அளித்தது போல, அவர் மகாத்மா காந்தியின் நினைவுநாளில் தன்னை அரசுப் பணியில் இருந்து விடுவிக்குமாறு தமிழக அரசுக்கு கடிதம் எழுதிய நிலையில், அவர் விரும்பிய தேதியில் விடுவிக்காமல் திடீரென ஜனவரி 2ம் தேதி தமிழக அரசு அவரை விடுவித்துள்ளது. அவர் ஜனவர் 6ம் தேதி வரை தமிழக அரசின் அறிவியல் நகரத்தின் த்ணை தலைவராக இருந்தார்.
இது குறித்து ஊடகங்களிடம் கூறிய சகாயம் ஐஏஎஸ், “நான் விருப்ப ஓய்வு கடிதம் கொடுத்திருந்தாலும், எனது விருப்ப ஓய்வு விண்ணப்பத்திற்கு டிசம்பர் 29ம் தேதி வரை அரசு பதிலளிக்கவில்லை. அதனால், ஜனவரி 30ம் தேதி காந்தி நினைவு நாளில் என்னை பணியில் இருந்து விடுவிக்குமாறு தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதினேன். இன்றுவரை, அந்த கோரிக்கைக்கு எந்த பதிலும் இல்லை. ஆனால், ஜனவரி 2ம் தேதி திடீரென தமிழக அரசு என்னை பணியில் இருந்து விடுவிக்க உத்தரவு பிறப்பித்தது. அதனால், என்னை பணியில் இருந்து விடுவிப்பதற்கான தேதியை மாற்றுவதற்கு தலைமைச் செயலாளரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். ஆனால், அதற்கு நேரம் வழங்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு அவரை பணியில் இருந்து விடுவிக்க உத்தரவு பிறப்பித்த பின்னரும் அவர், தற்போதைய பதவியை விட்டு விலக மறுப்பதாக வதந்திகள் பரவியது குறித்து, வேதனை தெரிவித்த சகாயம், “பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற முடிவு செய்துவிட்டேன். பிறகு, இப்போது ஏன் நான் இப்போது பின்வாங்க வேண்டும்? பணியில் இருந்து விடுபடுவதற்கு ஒரு நாள் முன்பு எனது விருப்ப ஓய்வு விண்ணப்பத்தை ரத்து செய்ய எனக்கு உரிமை உண்டு. ஆனால், நான் ஓய்வு பெற முடிவு செய்துவிட்டதால் அதை செய்ய மாட்டேன்.” என்று கூறியுள்ளார்.
சகாயம் ஓய்வுகுப் பிறகு அரசியலில் ஈடுபடுவாரா என்ற கேள்விக்கு, “நான் இன்னும் முடிவு செய்யவில்லை. எனது தனிப்பட்ட எதிர்காலம் குறித்து நான் பெரிய அளவில் எதுவும் திட்டமிடவில்லை. நான் எப்போதும் என்னை வழிநடத்தும் இயற்கையின் வழியில் செல்கிறேன்.
ஆனால், நான் சமூக சேவையில் ஈடுபட ஆர்வத்துடன் இருப்பேன்.” என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.