மூத்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் புத்தகத்திற்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சாகித்ய அகாடமி விருது:
இலக்கியத்திற்கு அளிக்கப்படும் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது தமிழில் மூத்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.2014-ஆம் ஆண்டு வெளியான சஞ்சாரம் என்ற புத்தகத்தை எழுதியதற்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கரிசல் பூமியின் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியலை பேசும் நாவலாக சஞ்சாரம் நாவல் உருவானது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பகுதியைச் சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் 1984-ஆம் ஆண்டிலிருந்து புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், திரைக்கதை, திரைப்பட உரையாடல்கள் உள்ளிட்ட படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு, தனது உரைகள், பத்திகள் மூலமாகச் சிறந்த இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் வருகிறார்.
ஆங்கிலம்,கன்னடம், வங்காளம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இவரது சிறுகதைகள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. "அட்சரம்" என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்து எட்டு இதழ்கள் வரை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச திரைப்படங்கள் மீதும், உலக இலக்கியங்கள் மீதும் தமிழ் சமூகத்தின் கவனத்தையும் சஞ்சாரம் நாவல் பெற்று வருகிறது. பெரும் மாற்றத்தை உருவாக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணன் 25 ஆண்டு காலமாக தொடர்ந்து முழு நேரமாக எழுதி வருகிறார்.
2018 ஆம் ஆண்டுக்கான தமிழ் நூலுக்குரிய சாகித்ய அகாடமி விருது யாருக்கு கிடைக்கும் என்பது பற்றி தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக விவாதிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒட்டு மொத்த எழுத்தாளர் சங்கத்தில் இருந்தும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.