சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயராக இருந்தவர் சைதை துரைசாமி. இவர் சென்னையில் மனிதநேயம் ஐ.ஏ.எஸ் அகாடமியை நடத்தி வருகிறார். இவரது மகன் வெற்றி துரைசாமி. இந்நிலையில் வெற்றி துரைசாமி தனது நண்பர் கோபிநாத்துடன் இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றார். அங்கு அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை சிம்லா நோக்கி இன்னோவா காரில் சென்று கொண்டிருந்தனர். உள்ளூரைச் சேர்ந்த தன்ஜின் என்பவர் காரை ஓட்டினார்.
சட்லஜ் நதி வழியாக சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோபிநாத் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து வெற்றி துரைசாமி குறித்த எந்த தகவனும் இல்லை. அவரை தேடும் பணி 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அவரது தந்தையான சைதை துரைசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாயமான தனது மகன் வெற்றி துரைசாமி பற்றி தகவல் அளித்தால் அவர்களுக்கு ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தகவலை சட்லஜ் ஆற்றங்கரையோரம் உள்ள பழங்குடியின மக்களிடம் தெரிவிக்கும் படியும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, விபத்துக்குள்ளான பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் வெற்றி துரைசாமி குறித்து தகவல் அறிய 2 நாட்கள் ஆகும் என இமாச்சலப் பிரதேச காவல்துறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“