/indian-express-tamil/media/media_files/2025/03/06/GXKZYaQKFMfurbHceQ86.jpg)
சேலத்தில் விஷ ஊசி செலுத்தி காதலி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம், புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் திருச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.
அப்பெண்ணை கடந்த 4 நாட்களாக காணவில்லை எனவும், அவரது செல்போன் எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது என்றும், விடுதியின் வார்டன் போலீசாரிடம் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திருச்சியை சேர்ந்த இளைஞரின் எண், செல்போனுக்கு அழைத்ததாக பதிவாகியிருந்தது.
மேலும், அப்பெண்ணின் செல்போன் ஏற்காடு மலைப்பாதையுடன் சுவிட்ச் ஆப் ஆனதும் தெரியவந்தது. இதையடுத்து இளம்பெண்ணுடன் பேசிய திருச்சி இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்நபர் மாயமான பெண்ணை கொலை செய்து ஏற்காடு 60 அடி பாலம் அருகே 20 அடி பள்ளத்தில் தூக்கி வீசியதாக தெரிவித்தார்.
இதையடுத்து, பள்ளப்பட்டி மற்றும் ஏற்காடு போலீசார் இளைஞர் குறிப்பிட்ட 20 அடி பள்ளத்தில் அழுகிய நிலையில் கிடந்த இளம்பெண் சடலத்தை நேற்று மீட்டு உடற்கூடாய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின. இது குறித்த விரிவான தகவலை போலீசார் அளித்துள்ளனர். அதன்படி, "
திருச்சி மாவட்டம் துறையூர் விநாயகர் தெருவைச் சேர்ந்தவர் லோகநாயகி (வயது 31). முதுகலை பட்டதாரியான இவருக்கும், பெரம்பலூர் அருணாச்சல கவுண்டர் நகரை சேர்ந்த பி.இ நான்காம் ஆண்டு படித்து வரும் அப்துல் ஹபீஸ் (வயது 22) என்பவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் மதம் மாறிய அப்பெண் தன் பெயரை அல்பியா என மாற்றிக் கொண்டார். இதைத் தொடர்ந்து,
அல்பியா, கடந்த 2023ம் ஆண்டு சேலம் வந்து தனியார் விடுதியில் தங்கியிருந்து ஆசிரியர் தேர்வுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுத்து வந்தார்.
இதனிடையே அப்துல் ஹபீஸ், சென்னை ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் காவியா சுல்தானா (வயது 22) என்பவருடன் பழகியுள்ளார். இதை அறிந்த அல்பியா, காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். தன்னைத் தவிர வேறு யாரையாவது திருமணம் செய்தால், உன்னையும், உனது குடும்பத்தையும் கொல்லாமல் விட மாட்டேன் என அல்பியா மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்துல் ஹபீஸ் தனது புது காதலி காவியா சுல்தானாவிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அதன்பின் அல்பியாவை கொலை செய்ய புது காதலியுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். இதற்கு உடந்தையாக இருக்க தனது முதல் காதலியான மருத்துவ கல்லூரி மாணவி மோனிஷாவிடம் (வயது 22) பேசியுள்ளார்.
அதன்படி, மோனிஷாவிடம் தனது உறவினர் பெண்ணின் சகோதரரை அல்பியா திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அவரை பாட்டிலால் அடித்து கொலை செய்து விட்டார். எனவே, அல்பியாவை பழி வாங்க வேண்டும். அவரை கொல்ல நீ உதவி செய்ய வேண்டும் என ஒரு பொய்யை கூறி மோனிஷாவை சம்மதிக்க வைத்துள்ளார்.
கடந்த 1ம் தேதி அப்துல் ஹபீஸ், மோனிஷா, காவியா சுல்தானா ஆகிய 3 பேரும் ஒரே பைக்கில் சேலத்துக்கு வந்தனர். பின்னர், அங்கிருந்து வாடகைக்கு டிரைவர் இல்லாமல் காரை மட்டும் எடுத்துக்கொண்டு, அல்பியா தங்கி இருக்கும் விடுதிக்குச் சென்று, அவரை வெளியே வரவழைத்துள்ளனர்.
அவரிடம் தனது காதலிகள் 2 பேரையும், தனது தோழிகள் என அறிமுகம் செய்து வைத்துள்ளார். பின்னர், அல்பியாவை காரில் அழைத்துக் கொண்டு ஏற்காடு போவோம் எனக் கூறி சென்றுள்ளார். மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே வந்தவுடன் காவியா சுல்தானா, அப்துல் ஹபீஸ் ஆகிய இருவரும் திடீரென அல்பியாவை பிடித்துக் கொண்டனர். அப்போது மோனிஷா, அல்பியா உடலில் விஷ ஊசியை இருமுறை போட்டுள்ளார்.
இதனால் அல்பியா உயிரிழந்தார். அதன் பின்னர், அவரது சடலத்தை 20 அடி பள்ளத்தில் தூக்கி வீசி விட்டு மூவரும் காரில் தப்பி சென்றனர்" என்று போலீஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. தற்போது, அப்துல் ஹபீஸ், காவியா சுல்தானா, மோனிஷா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்
செய்தி - க. சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.