திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் (டி.ஆர்.எஸ்) அவர்களால் சேலத்தில் 1935-ம் ஆண்டு தொடங்கிய திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மாடர்ன் தியேட்டர்ஸ் பல வரலாற்றுப் பெருமைகளுக்கும் சாந்தனைகளுக்கும் உரியது.
தென் இந்தியாவில் முதல்முறையாக உருவாக்கப்பட்ட பெரிய திரைப்படக் கூடம் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்தான். அந்த காலத்திலேயே, ஆண்டுக்கு 3 படங்களைத் தயாரித்தது. முதல் முறையாக வணப் படத்தை தயாரித்த பெருமை மாடர்ன் தியேட்டர்ஸுக்கு உண்டு. இந்த மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான வசனகர்த்தாவாக முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்தார்.
தற்போது, இந்த மாடர்ன் தியேட்டர்ஸ்-ன் உள்புறம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. ஆனால், பழமையான மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு மட்டுமே அப்படியே இருக்கிறது.
இந்நிலையில் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயில் முன்பு கருணாநிதியின் சிலையை வைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு விவாதத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் எ.வ.வேலு மாடர்ன் தியேட்டர்ஸ் முன்பு சிலை வைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்து ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
வரலாற்றுப் புகழ்மிக்க மாடர்ன் தியேட்டர்ஸ் குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் வாழப்பாடி ராம சுகந்தன் கூறியுள்ளதை இங்கே பார்ப்போம்:
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் வாழப்பாடி ராம சுகந்தன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“மாடர்ன் தியேட்டர்ஸ். வெறுமனே அது ஒரு சினிமா கம்பெனி அல்ல. சாதனைகளின் சிகரம். எல்லாவற்றையும் விட தமிழ்நாட்டிற்கே குறிப்பாக சேலத்தின் மிகப்பெரும் அடையாளம். நாடு சுதந்திரம் அடைவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே நிறுவப்பட்டது தான் மாடர்ன் தியேட்டர்ஸ். நிறுவனரான டி.ஆர்.சுந்தரம் வெளிநாட்டில் படித்தவர் என்பதால் அங்கிருந்தே திரைப்பட நிபுணர்களையும் தொழில்நுட்பங்களையும் கொண்டு வந்து தமிழ்நாட்டில் சினிமா வளர்ச்சிக்கு மிகப்பெரிய அடித்தளம் இட்டவர். 1940-லேயே பேசும் படத்தை முதன் முதலில் உத்தமபுத்திரன் என பி யு சின்னப்பாவை வைத்து இரட்டை வேடம் படத்தை தயாரித்து வெளியிட்டு வியக்க வைத்தது மாடர்ன் தியேட்டர்ஸ்.
மலைப்பிரதேசமான ஏற்காட்டில் இயற்கை வளம் எப்படி எல்லாம் இருக்கும் என்பதை தன் ஒவ்வொரு படங்களிலும் தவறாமல் சினிமா மூலம் வெளியுலகிற்கு காட்டியது மாடர்ன் தியேட்டர்ஸ். தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார்களாக திகழ்ந்த பி.யு. சின்னப்பா, எம்.ஜி.ஆர், கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி, வி.என். ஜானகி, கலைஞர், சிவாஜி, கண்ணதாசன் என மிகப்பெரிய பிரபலங்களுக்கு ஏணியாக அமைந்ததுதான் மாடர்ன் தியேட்டர்ஸ்.
சேலம் ஏற்காடு சாலையில் அமைந்துள்ள மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயிலில் காலடி படாத திரை உலக நட்சத்திரங்களே அந்நாளில் கிடையாது. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த மாடர்ன் தியேட்டர்ஸ் என்பது டி.ஆர். சுந்தரத்தின் அழிக்க முடியாத சாதனை சகாப்தம். சேலம் மக்கள் அனைவருக்குமே உண்டான பொதுவான பெருமைமிகு அடையாள சொத்து.” என்று ராம சுகந்தன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.