/tamil-ie/media/media_files/uploads/2023/02/Farmers-Protest.jpg)
சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் விநாயகர், மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலில் நாளை (மார்ச் 8) தொடங்கி மாசிமக திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி அங்குள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் வியாபாரிகள் தற்காலிக கடை அமைக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது உள்ளூர் தி.மு.க பிரமுகர் கடை அமைக்க பணம் கேட்டதாக கூறப்படுகிறது. வியாபாரிகள் பணம் கொடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அங்குள்ள அ.தி.மு.கவினர் வியாபாரிகளுக்கு ஆதரவாக பேசிய நிலையில் தி.மு.க- அ.தி.மு.க ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், கோயில் திருவிழாவை ஒரே நாளில் நடத்தி முடிக்க போலீசார் அறிவுறுத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர் பொதுமக்கள் சேலம் மூன்று ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடையவே, தாசில்தார் அருள் பிரகாஷ் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் கோயிலை சுற்றி கடைகள் வைக்க அனுமதி அளிக்கப்படாது என்ற நிபந்தனையுடன், திருவிழாவை முழுமையாக கொண்டாட அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.