சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஜாமீன் வழங்கியது குறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி, சேலம் மாஜிஸ்திரேட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருப்பவர் ஜெகநாதன். இவர், பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக, விதிகளை மீறி சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கி, அதன் மூலம் அரசு பணத்தை தவறாக பயன்படுத்தியதாக பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகராக இருந்த இளங்கோவன், கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சேலம் கருப்பூர் காவல்துறையினர் துணை வேந்தர் ஜெகநாதனை கடந்த நவ. மாதம் 26 ஆம் தேதி கைது செய்தனர். அவரை வேனில் அழைத்துச் சென்று சேலம் மாநகர் பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் வைத்து 6 மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தினர்.
ஜெகநாதன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகாத வார்த்தைகளால் பேசுதல், பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து டிச. 27 ஆம் தேதி காலை, சேலம் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன் ஜெகநாதன் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு துணைவேந்தர் ஜெகநாதனுக்கு 7 நாட்கள் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் 7 நாட்கள் சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி, சேலம் கூடுதல் ஆணையர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு நீதிபதி பி தனபால் முன் விசாரணைக்கு வந்தது, அப்போது காவல் துறை தரப்பில், வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் உள்ளதாக கூறிய மாஜிஸ்திரேட், நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட மறுத்தது தவறு. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப் பதிந்துள்ளதால் சிறப்பு நீதிமன்ற அதிகாரத்தை மாஜிஸ்திரேட் எடுக்க முடியாது என வாதிடப்பட்டது.
துணைவேந்தர் தரப்பில், புலன் விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆவணங்களை பார்வையிட அனுமதிக்கவில்லை. புகாரில் எந்த ஆவணங்களும் இணைக்கப்படவில்லை. இந்த பொய் புகார், உள்நோக்கத்துடன் அளிக்கப்பட்டுள்ளதாகவும், பழிவாங்கும் நடவடிக்கை என்றும் இடைக்கால ஜாமினை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல, என்றும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீவிரமான இந்த வழக்கில் தனிநபர் சுதந்திரமும் சம்பந்தப்பட்டுள்ளதால் துணைவேந்தர் தரப்பு வாதங்களையோ, பாதிக்கப்பட்ட புகார்தாரர் தரப்பு வாதங்களையோ கேட்காமல் இந்த மனு மீது உத்தரவு பிறப்பிப்பது முறையாக இருக்காது எனக் கூறி, ஜனவரி 12ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி துணைவேந்தர் தரப்புக்கு உத்தரவிட்டார்.
மேலும் ஜாமீன் வழங்கியது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.