நோய்வாய்ப்பட்ட சேலம் சுகவனேஸ்வரர் கோவில் பெண் யானை ராஜேஸ்வரியை கருணை கொலை செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் முரளீதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சேலம் சுகவனேஸ்வர் கோவில் பெண் யானை ராஜேஸ்வரி காலில் வலி மற்றும் காயம் ஏற்பட்டு கடந்த ஒருமாதமாக படுத்த படுக்கையாக உள்ளது. தொடர்ந்து படுத்துகிடப்பதால் அந்த யானைக்கு புண் ஏற்பட்டுள்ளது. அந்த யானையினை மருத்துவ ரீதியாக குணப்படுத்த முடியாது, ஆனால் ஜேசிபி எந்திரம் மூலம் நிற்கவைக்க முயற்சி செய்வதால் மேலும் யானைக்கு காயம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். எனவே யானையை கருணை கொலை செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது யானையை கருணை கொலை செய்யமுடியுமா? என்பது குறித்து பதிலளிக்கு இந்து அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 24 மணி நேரமும் சிறப்பு மருத்துவ குழுவினர், யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் இதுவரை அளித்த சிகிச்சைகள் எந்த பலனும் பலனளிக்கவில்லை. யானையின் உடல் நிலையில் எந்த முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே கருனை செய்யும் விசயத்தில் விலங்குகள் நல வாரியத்தையும் எதிர் மனுதராக சேர்க்க வேண்டும் என வாதிட்டார்.
அப்போது மனுதரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், யானைக்கு அளித்த சிகிச்சையில் எந்த முன்னேற்றம் இல்லை என அரசு தெரிவித்துள்ளது. மேலும் கருனை கொலை வழக்கில் விலங்குகள் நல வாரியத்தை எதிர் மனுதாரக சேர்க்க வேண்டியதில்லை அரசுக்கு இதில் உரிமை உள்ளது என வாதிட்டார்.
இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதிகள், யானையை சேலம் மாவட்ட கால்நடை துறை மருத்துவர் பரிசோதித்து 48 மணி நேரத்தில் அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அறிக்கை பெற்ற பின் விதிகளை பின்பற்றி கருணைக் கொலை செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.