சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த 53 வயது பெண் ஒருவர், முதல்வர் இல்லத்துக்கு புகார் மனு அளிக்க வந்த போது, பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி கொண்டு வந்த குற்றத்திற்காக நேற்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பூங்கொடிக்கு தனது சொந்த ஊரில் 11.5 சென்ட நிலம் இருந்துள்ளது.ஆனால், அவரது நிலத்தை மின்சார ஊழியரும், வழக்கறிஞர் ஒருவரும் ஆக்கிரமித்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கடந்தாண்டு அக்டோபர் 21 ஆம் தேதி செனோடாப் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்திற்குச் நீதி கேட்டு பூங்கொடி சென்றுள்ளார். ஆனால், அப்போது முறையாக பதில் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று, முதல்வரின் இல்லத்திற்குச் மீண்டும் புகாரளிக்க சென்றுள்ளார். ஆனால், இம்முறை கையில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலுடன் சென்றுள்ளார். அதனை கண்டறிந்த முதல்வர் வீட்டு வாசலில் உள்ள காவல் துறையினர், அவரை கைது செய்தனர்.
அப்பெண்ணிடம் தேனாம்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மனுவுக்கு நீதி கிடைக்காவிட்டால், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் பெட்ரோல் கொண்டு வந்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகித்தனர்.
பின்னர், அவரை உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் துறையினர், அவரது மனு மீதான நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil