சேலம் மாவட்டம், மேட்டூர், கொளத்தூர் அருகே சேத்துக்குழியைச் சேர்ந்த 25 வயது பொக்லைன் ஆப்பரேட்டர் ஒருவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட காய்ச்சலால் மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு, அங்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து மருத்துவமனை டீன் தேவிமீனாள் கூறுகையில், "கொரோனா தொற்று மட்டுமின்றி, சிறுநீரகம் செயலிழப்பு உள்ளிட்ட பல்வேறு இணை நோய்களாலும் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த இணை நோய்களே அவரது உயிரிழப்புக்கு முக்கியக் காரணம்" என்று தெரிவித்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.