/indian-express-tamil/media/media_files/XwbD4yrLF3AwEYTp2Kx5.jpg)
அமலாக்கத்துறை ரெய்டால் முடங்கிய மணல் விற்பனை பணி மீண்டும் தொடக்கம்; முன்பதிவு ஆன்லைன் முறையில் மட்டுமே அனுமதிக்கப்படும் என தலைமை பொறியாளர் விளக்கம்
பணமோசடி புகார்களை விசாரிப்பதற்காக கடந்த செவ்வாய்கிழமையன்று அமலாக்க இயக்குனரகம் நடத்திய சோதனையால் தமிழக அரசின் மணல் அள்ளும் பணி முடங்கிய ஒரு வாரத்துக்குப் பிறகு, மணல் விற்பனைக்கான ஆன்லைன் முன்பதிவை நீர்வளத் துறை தொடங்கியுள்ளது.
மணல் விற்பனைக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது. ஓரிரு நாட்களில் மணல் விற்பனை தொடங்கும். விற்பனை பரிவர்த்தனைகள் ஆன்லைன் முறையில் இருக்கும். இணைய வசதி அல்லது டிஜிட்டல் வங்கி அணுகல் இல்லாத லாரி உரிமையாளர்கள் முன்பதிவு செய்ய இ-சேவை மையங்களின் உதவியை நாடலாம், என்று நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் மற்றும் தலைமை பொறியாளர் ஏ.முத்தையா தெரிவித்தார் என தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மணல் விற்பனை நிலையங்களில் இருந்து சிசிடிவி பதிவு சாதனங்கள் மற்றும் கணினிகளின் ஹார்ட் டிஸ்க்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றதால் மணல் அகழ்வு மற்றும் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. மணல் விற்பனை செய்ய சிசிடிவி மற்றும் கணினி மயமாக்கப்பட்ட அமைப்பு செயல்படுவது அவசியம் என்பதால், மணல் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டது, என்று முத்தையா கூறினார்.
அமலாக்கத்துறை சோதனைகளை நடத்துவதற்கு முன்பு ரொக்கப் பணம் செலுத்தி மணல் விற்கப்பட்டதா என்று கேட்டதற்கு, பரிவர்த்தனைகள் எப்போதும் டிஜிட்டல் முறையில் தான் நடந்தது, ரொக்கப் பணம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று முத்தையா கூறினார்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் அகழ்வு மற்றும் விற்பனை தொடர்பான சில விவரங்களைக் கோரியிருந்தனர், அவை அனைத்தும் திறந்த பதிவு என்பதால் அதைப் பகிர்ந்து கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்றும் முத்தையா கூறினார். மேலும், மணல் விற்பனையில் நடந்த முறைகேடுகள் குறித்து, தலைமைப் பொறியாளர்களிடம் விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளதாக, தலைமைப் பொறியாளர் முத்தையா தெரிவித்தார்.
போலி பில்கள் மற்றும் போலி QR குறியீடுகள் பற்றிய அமலாக்கத்துறை அறிக்கை பற்றி கேட்டதற்கு, இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்கனவே என் கவனத்திற்கு வந்துள்ளது. போலி பில்கள் மற்றும் போலி QR குறியீடுகள் பற்றிய சில புகார்கள் இருந்தன. அவை உடனடியாக செயல் பொறியாளர்களிடம் தகுந்த நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் அவர்களால் பிரச்சினைகளை சுட்டிகாட்டிய லாரி உரிமையாளர்களை அணுக முடியவில்லை. சிசிடிவி காட்சிகள் அல்லது கணினிகளில் உள்ள தரவுகள் அழிக்கப்பட்டதாக புகார்கள் எதுவும் எனக்கு தெரியாது, என்று முத்தையா கூறினார்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தரப்பில் கூறுகையில், மணல் விற்பனையை ஆன்லைன் மூலம் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். மணல் விற்பனை நிலையங்களில் ரொக்கப் பணத்தைப் பெறுவதற்காக கவுன்டர்களை திறப்பது சட்டவிரோத விற்பனை, போலி பில்கள் போன்ற முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்.
ஆன்லைன் முறையிலும், மணல் விற்பனை நிலையங்களில் நிறுவப்பட்ட வங்கி கவுன்டர்களிலும் பணம் செலுத்துவதன் மூலமும் மணலை வாங்கலாம் என்று அரசாங்கம் வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. எங்களுக்குத் தெரிந்தபடி, இதுபோன்ற வங்கி கவுன்டர் எங்கும் திறக்கப்படவில்லை. இது முறைகேடுகளுக்கு வழி வகுத்தது. சில தனியார் நபர்கள் மணலை அள்ளி விற்பனை நிலையங்களுக்கு கொண்டு சென்றதுடன், அதிகாரிகளுடன் சேர்ந்து, ரொக்கப் பணம் மூலம் விற்பனை கவுன்டர்களை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சில முறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விற்பனை நிலையங்களில் பணம் செலுத்துவதற்கான கவுன்டர்களைத் திறப்பதற்குப் பதிலாக, முந்தைய அரசாங்கத்தில் செய்தது போல் அதிகாரிகள் டிமாண்ட் டிராப்ட்களை ஏற்கலாம், என்று கூறப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.