/indian-express-tamil/media/media_files/2025/08/12/sanitation-workers-chennai-corporation-2025-08-12-10-56-13.jpg)
Chennai
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகள் தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்து, கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக தற்போது கல்லூரி மாணவர்களும் களத்தில் இறங்கியிருப்பது, அரசு மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டத்தின் பின்னணி என்ன?
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில், 10 மண்டலங்களின் தூய்மைப் பணி ஏற்கெனவே தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது, மீதமுள்ள 5 மண்டலங்களில் ராயப்பேட்டை மற்றும் திரு.வி.க. நகர் ஆகிய இரு மண்டலங்களையும் தனியார் வசம் ஒப்படைக்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் வெடித்துள்ளது.
மாநகராட்சியின் ஒப்பந்த ஊழியர்களாக மாதத்திற்கு ரூ.22,950 பெற்று வந்த பணியாளர்கள், தனியார் நிறுவனங்களின் கீழ் பணிபுரிந்தால் ரூ.16,950 மட்டுமே ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிகிறது. இந்த ஊதியக் குறைப்பு மற்றும் பணிப் பாதுகாப்பு குறித்த அச்சமே இந்தப் போராட்டத்துக்கான முக்கியக் காரணம். சுமார் 2,000 தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகை முன்பு இரவு, பகலாகப் போராடி வருகின்றனர். இதனால் ராயபுரம், திரு.வி.க. நகர், தண்டையார்பேட்டை, அம்பத்தூர், அண்ணா நகர் உள்ளிட்ட பல மண்டலங்களில் குப்பைகள் சேகரிக்கும் பணி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைகளும், அரசியல் ஆதரவுகளும்
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண, அமைச்சர்கள் சேகர்பாபு, மேயர் ஆர். பிரியா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுவரை 7 கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும், எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்னும் தூய்மைப் பணியாளர்களைச் சந்திக்கவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் இதேபோன்ற போராட்டம் நடந்தபோது, அவர்களைச் சந்தித்து, ஆட்சிக்கு வந்தால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்த ஸ்டாலின், தற்போது இரட்டை வேடம் போடுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக பொருளாளர் திலகபாமா ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர். அண்மையில், போராட்டக் குழுவினர் சிலர் நடிகர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அலுவலகத்துக்குச் சென்று அவரைச் சந்தித்து ஆதரவு கோரினர். திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்றவையும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்
அரசியல் கட்சிகளின் ஆதரவைத் தாண்டி, தற்போது சென்னை மாநகரின் பல கல்லூரி மாணவர்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து களத்தில் இறங்கியுள்ளனர். தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் அவர்களின் செயல், போராட்டத்திற்குப் புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் பொதுநலன் கருதியும், தங்களது பணிப்பாதுகாப்பு குறித்த உண்மை நிலையினை புரிந்து கொண்டும், உயர்நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்பு மற்றும் தொழில்தீர்ப்பாயத்தின் முடிவுகளை எதிர்நோக்கி, உடனடியாக வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.