/indian-express-tamil/media/media_files/2025/07/23/coimbatore-civic-issues-2025-07-23-18-33-29.jpg)
பாதுகாப்பற்ற பாதாள சாக்கடைப் பணி: கோவை மாநகராட்சிக்கு வலுக்கும் கண்டனம்!
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சிங்காநல்லூர் பகுதியின் உப்பிலிபாளையத்தில், எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி தூய்மைப் பணியாளர்கள் பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல் என்பதால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
அரசு விதிமுறைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின்படி, பாதாள சாக்கடைப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு சீருடை, முகக் கவசம், கையுறைகள் உள்ளிட்ட அத்தியாவசிய உபகரணங்கள் வழங்குவது கட்டாயமாகும். ஆனால், சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியில், தூய்மைப் பணியாளர்கள் எந்தவித பாதுகாப்புமின்றி, நேரடியாக பாதாள சாக்கடைக்குள் இறங்கி கழிவுகளை அகற்றினர். இது அவர்களின் உயிருக்கே ஆபத்தான சூழலை உருவாக்குகிறது.
இந்த அவல நிலையைக் கண்ட கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம், தனது வாகனத்தை நிறுத்தி தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். "நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான், நாடு ஆரோக்கியமாக இருக்கும். பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இதுபோன்ற பணிகளில் ஈடுபடக் கூடாது" என்று அவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்ட அவர், "பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் தூய்மைப் பணியாளர்களை இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது. அவர்களும் மனிதர்கள்தான், அவர்களுக்கும் வாழ்க்கை உள்ளது" என்று கண்டிப்புடன் தெரிவித்தார். தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கோவை மாநகராட்சி மக்கள் மீது வரிச் சுமையை சுமத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், வீட்டு வரி, குடிநீர் வரி, குப்பை வரி என பல்வேறு வரிகளை தனியார் நிதி நிறுவனத்தைப்போல வசூலிப்பதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அடிப்படை பாதுகாப்பை கூட உறுதி செய்யாத மாநகராட்சியாக கோவை மாநகராட்சி இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக முன்னுரிமை அளித்து, உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி, ஆபத்தான பணிகளில் அவர்களை ஈடுபடுத்துவதைத் தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.