தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சித் தலைவர் பதவியில் இருந்து திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி, இன்று நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் தோல்வியடைந்து பதவியை இழந்தார். இவருக்கு எதிராக அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்கள் இணைந்து கொண்டு வந்த தீர்மானம், 28 வாக்குகள் ஆதரவுடன் வெற்றி பெற்றது.
சங்கரன்கோவில் நகராட்சி மொத்தம் 30 வார்டுகளைக் கொண்டது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 12 வார்டுகளிலும், திமுக 9 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. மதிமுக 2 வார்டுகளிலும், காங்கிரஸ், எஸ்டிபிஐ தலா ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தனர்.
நகராட்சித் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் உமா மகேஸ்வரியும், அதிமுக சார்பில் முத்துலெட்சுமியும் போட்டியிட்டனர். மதிமுக, காங்கிரஸ், எஸ்டிபிஐ, மற்றும் சுயேச்சை கவுன்சிலர்களின் ஆதரவுடன் உமா மகேஸ்வரிக்கு 15 வாக்குகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்துலெட்சுமிக்கு 15 வாக்குகளும் கிடைத்து சமநிலை ஏற்பட்டது. இதனால், குலுக்கல் முறையில் நகராட்சித் தலைவராக உமா மகேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவைச் சேர்ந்த கண்ணன் (எ) ராஜு துணைத் தலைவராக உள்ளார்.
உமா மகேஸ்வரி தலைவராகப் பொறுப்பேற்ற சில மாதங்கள் மட்டுமே நகராட்சி கூட்டங்கள் அமைதியாக நடைபெற்றன. அதன் பின்னர், நகராட்சித் தலைவருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தலைதூக்கின. இதனால் நகராட்சி கூட்டங்களில் கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டன. பல முக்கியத் தீர்மானங்களை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையும் உருவானது.
கடந்த 2023-ஆம் ஆண்டிலேயே அதிமுக கவுன்சிலர்களுடன் திமுக கவுன்சிலர்களும் இணைந்து நகராட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போதைய சூழலில், திமுக தலைமை இந்த விவகாரத்தில் தலையிட்டுச் சமரசம் செய்ததால், உமா மகேஸ்வரியின் பதவி தப்பியது. இருப்பினும், நகராட்சி நிர்வாகத்தில் தொடர்ந்து புகைச்சல் இருந்து வந்தது.
பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை, நகராட்சியில் முறைகேடுகள் நடைபெறுகின்றன என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்கள் உட்பட 24 பேர் கையெழுத்திட்டு, நகராட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி கடந்த மாதம் 2-ஆம் தேதி நகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து, திமுக தலைமை மீண்டும் இரு தரப்பையும் அழைத்துச் சமாதான முயற்சிகளை மேற்கொண்டது. திமுகவைச் சேர்ந்த ஒருவர் பதவியை இழந்தால் அது கட்சிக்குள்ளேயே சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதால், அதிருப்தியில் உள்ள கவுன்சிலர்களைச் சமாதானப்படுத்தும் பொறுப்பு தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏவிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும், மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏவும் நகராட்சித் தலைவர் மீது அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், நம்பிக்கையில்லா தீர்மானம் என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று (ஜூலை 2) சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்புக் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி பங்கேற்கவில்லை. இது, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை முன்கூட்டியே உணர்த்தியது.
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 28 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். திமுகவைச் சேர்ந்த ஒரு கவுன்சிலர் மட்டுமே தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தார். பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால், திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி நகராட்சித் தலைவர் பதவியை இழந்தார்.
செய்தி - க. சண்முகவடிவேல்