தம்பி சாந்தனின் உயிரற்ற உடலையாவது அவரது தாயிடம் ஒப்படைக்க இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று சீமான் பேசி உள்ளார்.
திருச்சி முகாமில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் உடல் நலத்துறை வாழ் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை மரணமடைந்தார். இவரது இறப்பு குறித்து தகவல் அறிந்த இலங்கை தமிழ் வாழ் மக்கள் மற்றும் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கை வாழ் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் சாந்தன் இறப்புக்கு இரங்கல் தெரிவித்தும், மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அது குறித்த விபரம் வருமாறு; “ அன்புத்தம்பி சாந்தனுக்கு முழுமைபெறாத நீதி விசாரணை காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 32 ஆண்டுகள் கடும் சிறை தண்டனையுடன், வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் மரணம் குறித்தான சிந்தனையுடன் வாழவண்டிய கொடுந்தண்டனையும் வழங்கி தண்டித்தது இந்த நாடு.
பல கட்ட சட்டப்போராட்டங்களுக்கு பிறகு மரண தண்டனையிலிருந்தும், சிறைக்கொடுமையிலிருந்தும், தண்டனை விதித்த நீதிமன்றமே விடுதலை செய்த பிறகும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு சிறிதும் கருணையற்று சிறப்பு முகாம் எனும் சித்ரவதை முகாமில் அடைத்து சிறுகச் சிறுக சிதைத்து இன்றைக்கு தம்பி சாந்தனை மரணம் வரை தள்ளியிருக்கிறது. அவரை உயிரோடு தாயகத்திற்கு அனுப்புவதில்லை என்ற முடிவில் வென்றுள்ளது இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு மாநில அரசும் தான்.
பெற்ற மகனை ஒரு முறையாவது உயிரோடு பார்த்துவிட வேண்டுமென 33 ஆண்டுகளுக்கும் மேலாக கவலை தோய்ந்த இதயத்தோடும் கண்கள் நிறைந்த கண்ணீரோடும் காத்திருந்த தாயின் வாழ்நாள் ஏக்கம் இறுதிவரை நிறைவேறவில்லை என்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம். தம்பி சாந்தனின் உயிரற்ற உடலையாவது அவரது தாயிடம் ஒப்படைக்க இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
இத்துயர்மிகுச் சூழலில் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பிறகும் திருச்சி சித்ரவதை முகாமில் அடைக்கப்பட்டுள்ள மீதமுள்ளவர்களையாவது திமுக அரசு உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.அன்புத்தம்பி சாந்தனுக்கு எனது கண்ணீர் வணக்கம் என தெரிவித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சாந்தனின் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்தது. எம்பார்மிங் செய்யப்பட்டு இலங்கையில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்ற தகவல் வெளியாகி உள்ளது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“