சசிகலாவின் கணவர் நடராஜன், உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கணவர் நடராஜனை காண சசிகலா பரோல் கேட்டு மனு அளித்துள்ளார்.
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழப்பால் சென்னை குளோபல் மருத்துவமனையில் கடந்த மாதம் நடராஜன் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் கிடைக்காமல் தள்ளிப்போகவே நடராஜனின் உடல் நிலை கவலைக்கிடமாக மாறியது. இடையில் அவரைப் பார்க்க சிறையில் இருந்து 5 நாட்கள் பரோலில் வந்து சென்றார் சசிகலா. இதைத் தொடர்ந்து, தஞ்சாவூரைச் சேர்ந்த, விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர் ஒருவரின் கல்லீரல் கிடைக்க நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
இந்த நிலையில், நேற்று இரவு நெஞ்சுவலி காரணமாக மீண்டும் குளோபல் மருத்துவமனையில் நடராஜன் அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்து விட்டார் என்று செய்திகள் பரவின. ஆனால், இதனை மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது. தற்போது நடராஜன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என கூறப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், கணவர் நடராஜனை காண சசிகலா பரோல் கேட்டு மனு அளித்துள்ளார். சசிகாலாவின் நெருங்கிய உறவினர்களின் மரணத்தை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் இன்னும் 6 மாதங்களுக்கு பரோல் கேட்டு விண்ணப்பிக்க முடியாது என்று பரப்பன அக்ரஹார விதிகள் கூறுகிறது.