போயஸ் கார்டனில் நடந்த சோதனைக்கு சசிகலா குடும்பமே காரணம் என்று மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில்தான், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்தார். அவர் மறைவுக்குப் பின்னர், அந்த வீட்டை அரசு நினைவு இல்லமாக மாற்றப்போவதாக அறிவித்தது. அதையடுத்து போலீஸ் காவலுக்கு அந்த வீடு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள், போயஸ் தோட்ட இல்லத்திற்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர். இது குறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், ‘புரட்சி தலைவி அம்மா குடியிருந்த வீடு எங்களுக்கு கர்ப்ப கிரகம் போன்றது. ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் புனிதத்தலமான அம்மாவின் இல்லத்தில் சோதனை என்பது மன வருத்தத்தை தருகிறது. இந்த சோதனையில் சதி இருக்கிறது' என்று தெரிவித்தார்.
நேற்று இரவு சோதனை நடந்த போது டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மட்டுமே போயஸ் தோட்ட இல்லம் முன்பு திரண்டனர். அவர்கள் அனைவரும் இபிஎஸ் - ஓபிஎஸ்க்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
முதல்வரோ துணை முதல்வரோ இந்த ரெய்டு பற்றி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இது அதிமுக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பட்டினம்பாக்கத்தில் மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :
’அம்மாவின் இல்லத்தை நாங்கள் திருக்கோயிலாக வணங்குகிறோம். அந்த இல்லத்தில் சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் இருந்த காரணத்தினால்தான், ரெய்டு நடந்திருகிறது. அதை திசை திருப்பிவிட்டு ஆதாயம் தேட முயன்றால் தமிழக மக்களும் ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
வருமான வரித்துறையினர் சோதனை நடத்த மாநில அரசிடம் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இதை அவர்கள் திசை திருப்ப பார்க்கிறார்கள். சசிகலா குடும்பத்தைப் பற்றி தமிழக மக்களுக்குத் தெரியும். இதை திசை திரும்ப்பி ஆதாயம் தேட நினைத்தால் அது நடக்காது’ என்றார்.
மக்களவை துனை சபாநாயகர் தம்பித்துரை கரூரில் நிருபர்களிடம் பேசிய போது, ‘அம்மா வசித்த வீடு என்பது எங்களைப் பொறுத்தவரையில் புனிதமானது. அதற்கு எந்த களங்கமும் ஏற்படக் கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம். அதற்கு களங்கம் ஏற்படும் வகையில் யார் செயல்பட்டாலும் அதை ஏற்க முடியாது. போயஸ் கார்டனில் நடந்த வருமான வரித்துறை சோதனை குறித்து முதல்வரை சந்தித்து ஆலோசிக்க இருக்கிறேன்.’ என்றார்.