சாத்தான்குளம் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு: ஐ.ஜி., எஸ்.பி மாற்றம்
Jeyaraj and Fenix death : ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருப்பதால் விசாரணையை ஒரு நொடி கூட தாமதிக்கக்கூடாது
Sathankulam, father – son death, thoothukudi, jeyaraj and fenix death, CBCID enquiry, sathankulam police station, high court madurai bench, thoothukudi Sp, transfer
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை – மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கை, சிபிஐ விசாரணைக்கு எடுக்கும் வரை தற்காலிகமாக சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் முன்பாக நடைபெற்றது. விசாரணையில் நீதிபதிகள், உடற்கூறு அறிக்கையின்படி, ஜெயராஜ் – பென்னிக்ஸ் ஆகியோரது உடலில் மோசமான காயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளதால், காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று கூறியதோடு, இந்த வழக்கில் தடயங்களை மறைக்க வாய்ப்புள்ளதால், சிபிஐ விசாரணைக்கு முன்னர், இந்த வழக்கை நெல்லை சரக டிஐஜி அல்லது சிபிசிஐடி விசாரிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியிருந்தனர். அதன்படி, சிபிஐ விசாரணைக்கு எடுக்கும் வரை, சிபிசிஐடி இவ்வழக்கை விசாரிக்கும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். நெல்லை சரக டிஐஜி மூன்று மாவட்டங்களுக்கு பொறுப்பு என்பதால், அவர் தற்போது கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பதால் நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில் குமார் இவ்வழக்கை விசாரிக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும், ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்பத்தினர் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருப்பதால் விசாரணையை ஒரு நொடி கூட தாமதிக்கக்கூடாது என்று கூறிய நீதிபதிகள், நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி இன்றே வழக்கின் விசாரணையைத் தொடங்க உத்தரவிட்டுள்ளனர்.
தூத்துக்குடி எஸ்.பி. மாற்றம் : தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில், தென்மண்டல ஐ.ஜி.யாக இருக்கும் சண்முக ராஜேஸ்வரன் இன்றுடன் ஓய்வு பெறுவதால் தென் மண்டல புதிய ஐஜியாக எஸ். முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை பொருளாதார குற்றப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த அருண் பாலகோபாலன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.அவருக்கு பதிலாக விழுப்புரம் காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜெயக்குமார் தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil