சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில், காவல்நிலையத்தில் பணியாற்றிய 9 காவலர்கள் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சி.பி.ஐ.
கொரோனா ஊரடங்கு காலத்தில், தங்கள் செல்போன் கடையைக் கூடுதல் நேரம் திறந்தது தொடர்பாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் (ஜெயராஜ்-பென்னிக்ஸ்) இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சிறை மரணம் குறித்து, மத்திய புலனாய்வு துறை மூலம் விசாரிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
இந்த வழக்கை முதலில் விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், கொலை வழக்காக பதிவு செய்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முதல்நிலை காவலர் முத்துராஜா, சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை, தலைமைக் காவலர் சாமிதுரை, முதல் நிலைக் காவலர்கள் வெயில்முத்து, செல்லதுரை, தாமஸ் பிராங்க்ளின் உள்ளிட்ட 10 போலீசாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், சிபிஐ காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ் உள்ளிட்ட 9 காவலர்கள் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil