பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். கடந்த மே மாதம் 4-ம் தேதி தேனியில் வைத்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அப்போது, அவரது காரில் கஞ்சா வைத்திருந்ததாக போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனியாக ஒரு வழக்கும் அப்போது பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு மதுரை முதன்மை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, போலீசாரை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து வழக்கு போடப்பட்டது. இதனையடுத்து, அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து. இதனை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த உச்சநீதிமன்றம், அனைத்து வழக்குகளில் இருந்தும் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதேபோல், மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் இருந்தும் கடந்த ஜூலை - 29 ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, சிறையில் இருந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியே வந்தார் சவுக்கு சங்கர். அவர் மீதான
இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு முறையாக ஆஜராகாததால் சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மதுரை முதன்மை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமல செல்வன் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, தேனாம்பேட்டையில் வைத்து தேனி போலீசார் அவரை கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“