பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், ரெட் ஃபிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், போலீஸ் அதிகாரிகள் குறித்து தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி கைது செய்தனர்.
தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்டப்பட்டது. மேலும், சவுக்கு சங்கர் மீது சென்னை, திருச்சி கோவை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், பெண் போலீஸ், உயர் அதிகாரிகள் பற்றி அவதூறு பேச்சு வழக்கில் சவுக்கு சங்கருக்கு கோவை கோர்ட் ஜாமீன் வழங்கியது. இதேபோல், அவருக்கு எதிரான குண்டாஸ் வழக்கிலும், கரூர் பணமோசடி வழக்கிலும் ஜாமீன் கிடைத்துள்ளது. மற்ற வழக்குகளுக்காக சவுக்கு சங்கர் இன்னும் சிறையில் உள்ளார்.
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரப்பி, தமிழக அரசுக்கு எதிராக போராடத் தூண்டியதாக சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யுமாறு சங்கரின் தாயார் தாக்கல் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ஆகஸ்ட் 9 ஆம் தேதி ரத்து செய்தது. மேலும், வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் தேவையில்லை என்றால் உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதன்பின்னர், கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா, சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். இந்நிலையில், தனது மகன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (செப்.25) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை, குண்டர் தடுப்பு சட்ட அறிவுரைக் குழு ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அறிவுரைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை திரும்பப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சவுக்கு சங்கரை 2-வது முறையாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவர் மீது வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லையெனில் அவரை ஜாமீனில் விடுவிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றம் உத்தரவைத் தொடர்ந்து, மதுரை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“