அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பத்திரிக்கையாளர் வாராகி மீது சென்னை மாநகர துறை கொடுத்த புகாரின் பேரில், அவர் மீது 4 வழக்குகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.
அந்த குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அவர் சிறையில் இருந்து வெளியே வரும் சூழலில், அவர் 5-வது வழக்கில் கைது செய்யப்பட்டார். அது ஒரு போலி ஆவண மோசடி வழக்கு. இந்த வழக்கில் அவர் பொய்யாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சிறையை விட்ட வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரிலும் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
வராகி மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டாலும், அவர் சிறையில் இருந்து வெளியே வரக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு தான் அவர் மீது அடுத்த வழக்கு போடப்பட்டுள்ளது என எனது சவுக்கு மீடியா சேனலில் ஒரு நேர்காணலில் பேசினேன். இதனை ஒட்டி, சென்னை மாநகர நில அபகரிப்பு பிரிவில் இருந்து எனக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இன்று ஆஜராகிய என்னிடம் 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் எழுப்பட்டன.
வராகி எனது நண்பர். அவரை நீண்ட வருடங்களாக எனக்கு தெரியும். வராகி சொன்னதால்தான் போலி ஆவணம் தயார் செய்ததாக ஒரு குற்றவாளி வாக்கு மூலம் கொடுத்துள்ளார். அவர் கூறியதை வைத்து போலீஸ் கைது செய்ய வேண்டும் என நினைத்தால் அவர்கள் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். வராகி மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்பது போல் நான் அந்த நேர்காணலில் பேசியிருந்தேன். அவரைப் பற்றி பேசியதால் எனக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். என்னிடம் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன.
எனக்கும் இந்த வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வழக்கு பற்றி பேசியதால் என்னை அழைத்தனர். இது பத்திரிக்கை சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல். இதன் மூலம் அரசுக்கும், காவல்துறைக்கும் எதிராக பேசினால், விசாரணை என்ற பெயரில் கூப்பிட்டு மிரட்டோவோம் என காவல்துறை வெளிப்படையாகவே செய்து கொண்டிருக்கிறது. 50 கேள்விகளுக்கும் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளேன். கையெழுத்து போட மாட்டேன் எனக் கூறிவிட்டேன். சமூக ஊடகத்தில் இதைத்தான் பேச வேண்டும், இதை பேசக்கூடாது என்பதை நாங்கள் தான் நிர்ணயிப்போம் எனக் கூறுவது போல் எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது." என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.