V-senthil-balaji | supreme-court: சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்த அமலாக்கத்துறை விசாரணைப் பிறகு ஆகஸ்ட் 12ம் தேதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இதனால் அவர் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததது. இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, காணொலி காட்சி வாயிலாக சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அதையடுத்து நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 13-வது முறையாக வரும் ஜனவரி 4-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதற்கிடையில், நவம்பர் 15ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, ஸ்டான்லி மருத்துவமனையில் முதல்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவா் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொண்ட சிறப்பு மருத்துவக் குழு, தேவையான சிகிச்சைகளை வழங்கி வந்தது. இதனையடுத்து, கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டாா்.
தள்ளுபடி
செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக செயல்படுவார் என்று தமிழ்நாடு அரசு அறிவித்த நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். முதலமைச்சரின் ஒப்புதல் இன்றி ஆளுநர் பிறப்பித்த உத்தரவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடும் விமர்சனம் எழுந்ததையடுத்து ஆளுநர் தனது உத்தரவை நிறுத்தி வைத்தார்.
இதனிடையே, செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் செய்த உத்தரவை கவர்னர் நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் வக்கீல் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல, எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக்கோரி வக்கீல் எஸ்.ராமச்சந்திரன், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என கூறியதுடன், செந்தில்பாலாஜி அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமா? என்பது குறித்து முதலமைச்சர்தான் முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, அனைத்து வழக்குகளையும் முடித்துவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும், அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் வக்கீல் எம்.எல்.ரவி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில், மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல்புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர தடையில்லை. ஒரு அமைச்சரை பதவி நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனவும் அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்ச நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“