டாஸ்மாக் வழக்கில் இரு தரப்பு வாதங்கள்: இ.டி-க்கு எதிராக சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன?

"நீங்கள் கூட்டாட்சி கட்டமைப்பை முற்றிலும் மீறுகிறீர்கள்... அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறுகிறது" என்று விசாரணையை முடிப்பதற்கு முன்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்தார்.

"நீங்கள் கூட்டாட்சி கட்டமைப்பை முற்றிலும் மீறுகிறீர்கள்... அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறுகிறது" என்று விசாரணையை முடிப்பதற்கு முன்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
TASMAC, SC, ED

தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மீதான அமலாக்க இயக்குநரகத்தின் பணமோசடி விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று ( மே 22) உத்தரவிட்டது. குறிப்பாக, அமலாக்கத்துறை  "அனைத்து வரம்புகளையும் மீறி கூட்டாட்சி கட்டமைப்பை மீறுவதாக" உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தது.

Advertisment

 

 

Advertisment
Advertisements

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி ஏ.ஜி. மசிஹ் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு, டாஸ்மாக் தலைமையகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்தது.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், சில மதுபானக் கடைகளை ஒதுக்கப்பட்டவர்கள் ரொக்கமாகப் பணம் பெற்றதை டாஸ்மாக் நிறுவனம் கண்டறிந்தது என்றார். "எனவே மாநில அரசே 2014 - 2021 வரை, 41 முதல் தகவல் அறிக்கைகளை (FIR) தனிநபர்களுக்கு எதிராகப் பதிவு செய்தது. எனினும், நிறுவனத்திற்கு எதிராக அல்ல. 2025 ஆம் ஆண்டில் அமலாக்கத்துறை தலையிட்டு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்துகிறது," என்று சிபல் வாதிட்டார்.

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜுவிடம், தலைமை நீதிபதி, "நிறுவனத்திற்கு எதிராக எப்படி குற்றச்சாட்டு இருக்க முடியும்?... நீங்கள் தனிநபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யலாம். ஒரு குற்றச் சம்பவத்தில் நிறுவனம் எப்படி வர முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.

"திரு. ராஜு, உங்கள் அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறுகிறது," என்று கூறி, இரண்டு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு அமலாக்க இயக்குநரகத்திற்கு தலைமை நீதிபதி கவாய் உத்தரவிட்டார். இதனிடையே, மனுதாரர்களுக்கு எதிரான மேலதிக நடவடிக்கைகளுக்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

டாஸ்மாக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, அமலாக்க இயக்குநரகம் ஊழியர்களின் தொலைபேசிகளை எடுத்து குளோன் செய்ததாகக் கூறினார். சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று அமலாக்க இயக்குநரகத்திற்கு உத்தரவிடுமாறு சிபல் மற்றும் ரோஹத்கி நீதிமன்றத்தை வலியுறுத்தினர். "அவர்கள் எங்கள் தரவுகளை எடுத்துள்ளனர். தரவுகளைப் பயன்படுத்த முடியாது..." என்று சிபல் கூறினார். "தனியுரிமை என்ற ஒன்று உள்ளது" என்று ரோஹத்கி மேலும் கூறினார்.

ரூ. 1,000 கோடி மோசடி வழக்கில் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக ஏ.எஸ்.ஜி ராஜு தெரிவித்தார். "நாங்கள் ஏற்கனவே உங்களைப் பாதுகாத்துள்ளோம். நீங்கள் கோருவதை விட அதிகமாக நாங்கள் வழங்க முடியாது" என்று தலைமை நீதிபதி கவாய் கூறினார்.

மாநில அரசு ஏற்கனவே முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்துள்ளதைக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி கவாய், ஏ.எஸ்.ஜி ராஜுவிடம், "அமலாக்கத்துறை ஏன் தேவையின்றி நடவடிக்கை எடுத்தது? அடிப்படை குற்றம் எங்கே?" என்று கேள்வி எழுப்பினார்.

அமலாக்க இயக்குநரகத்தின் விசாரணையில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாகவும் ராஜு தெரிவித்தார். பதில் மனு தாக்கல் செய்யப்பட்டவுடன் நீதிமன்றம் வழக்கை விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி கவாய் கூறினார்.

விசாரணையை முடிப்பதற்கு முன், தலைமை நீதிபதி, "நீங்கள் கூட்டாட்சி கட்டமைப்பை முற்றிலும் மீறுகிறீர்கள்... அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறுகிறது" என்று கூறினார். இதற்கு, ராஜு, "இந்த வழக்கில் அப்படி இல்லை" என்று பதிலளித்தார்.

கடந்த மார்ச் மாதம், டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்க இயக்குநரகம்  சோதனை நடத்தியது. மார்ச் 6 மற்றும் மார்ச் 8 ஆகிய தேதிகளில் சென்னை டாஸ்மாக் தலைமையகம் உட்பட 20 இடங்களில் அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Supreme Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: