School girl dies after bitten by snake: திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூர் அருகே பள்ளி விடுதியில் தூங்கிக்கொண்டிருந்த 9 ஆம் வகுப்பு மாணவி பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைகானல் அருகே பெரியூர் கிராமத்தைச் சேர்ந்த ராமன் என்பவருடைய மகள் வர்ஷா (14). இவர் திண்டுக்கல் மதுரை சாலையில் உள்ள பேகம்பூர் அருகே உ ள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்துவந்தார். இவர் பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியிலேயே தங்கி படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு விடுதியில் தூங்கிக்கொண்டிருந்த மாணவி வர்ஷா இரவு 1 மணிக்கு தன்னை ஏதோ கடித்துவிட்டதாக சக மாணவிகளிடம் கூறியுள்ளார். சிறிது நேரத்திலேயே அவருடைய உடல்நிலை மோசமாவதைக் கூறிய நிலையில் அவர் வாயிலிருந்து நுரை தள்ளி மயங்கியுள்ளார்.
இதனிடையே, மாணவியை கடித்தது என்ன என்று விடுதியில் சோதனை செய்தபோது அங்கே ஐந்து அடி நீளமுள்ள பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அந்த பாம்பைக் அடித்து கொன்றுள்ளனர். மாணவியை பாம்பு கடித்ததை அறிந்த பள்ளி விடுதி காப்பாளர் மற்றும் சக மாணவிகள் வர்ஷாவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் போலீசார் மாணவி இறந்தது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பள்ளி விடுதியில் உரிய பாதுகாப்பு இல்லாததால்தான் பாம்பு விடுதிக்குள் சென்று கடித்துள்ளது என்றும் மாணவியின் உயிரிழப்புக்கு இதுவே காரணம் என்று கூறப்படுகிறது. பள்ளி விடுதியில் பாம்பு கடித்து மாணவி உயிரிழந்த சம்பவத்தால், விடுதியின் பாதுகாப்பு நிலைமை குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.