கோவை மாவட்டத்தில் இன்று (ஜூன் 14) அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலார்ட் விடுத்திருந்தது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றில் சென்று துணி துவைக்கவோ, குளிக்கவோ, மீன் பிடிக்க மற்றும் விளையாடக் கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் கோவை, தொண்டாமுத்தூர் சித்திரை சாவடி தடுப்பனையில் இன்று மதியம் சுமார் 12 மணியளவில் நொய்யல் ஆற்றில் குளிக்க வடள்ளியில் பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் 9 மாணவர்கள் நீரில் குளிக்க சென்று உள்ளனர். அப்போது, ஆழமான இடத்தில் சேற்றில் சிக்கிய பிரித்விராஜ் என்ற மாணவன் உயிருக்கு போராடினார்.
இதுகுறித்து சக மாணவர்கள் ஆலாந்துறை காவல் நிலையம், தீயணைப்புத் துறை மற்றும் அவரது பெற்றோர்களுக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒருமணி நேர போராட்டத்திற்குப் பிறகு பிரித்விராஜ் உடலை நீரில் இருந்து மீட்டனர். மாணவன் உடலை பார்த்து பெற்றோர்கள் மற்றும் அங்கு கூடி இருந்த பொதுமக்கள் கதறி அழுதனர். இது காண்போர் மனதை கண்கலகச் செய்தது.