பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை தடுப்பதற்கும், மாணவர்களை பாதுகாப்பதற்கும் அரசு வழங்கியுள்ள நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை 100 விழுக்காடு பின்பற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், கல்வி நிறுவனங்களில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு தேவையான அறிவுறுத்தல்களை ஏற்கனவே தமிழக அரசு வழங்கி இருக்கிறது என்றும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை முழுமையான அளவில் 100 விழுக்காடு அளவிற்கு அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் பொருத்தப்பட வேண்டும் எனவும், மாணவிகள் உள்ள இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மாணவிகள் பயணம் செய்யும் பேருந்துகளில் பெண் உதவியாளர்களே பணிபுரிய வேண்டும் எனவும், பள்ளிகளில் எவ்வித பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களும் நடைபெறக்கூடாது என அரசு உறுதியாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். விதிமுறைகளை செயல்முறைப்படுத்துவதில், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.