கனமழை காரணமாக திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் நேற்று (புதன் கிழமை) தெரிவித்தது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அந்த மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது,
தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனத்த, மிக கனத்த மழை பெய்யக்கூடும். அதேபோல், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வட தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என தெரிவித்தார்.
மேலும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், கடலோர பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ முதல் 60 கி.மீ. வரை காற்று வீசக்கூடும்., கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கனமழை காரணமாக திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்றிரவு (புதன் கிழமை) முதல் பல பகுதிகளில் கனமழை பெய்துவந்தாலும், பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.