கோயம்பேடு மார்க்கெட்டில் சொத்து வரி செலுத்தாத 39 கடைகளுக்கு சீல் வைக்கட்டுள்ளதாகவும். மேலும் வரி செலுத்த ஒரு வாரம் கால அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சொத்து வரி செலுத்தும்படி, சென்னை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, கோயம்பேடு மார்க்கெட்டில் கடை ஒதுக்கீடு பெற்றவரகள் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், முன் விசாரணைக்கு வந்தது, அப்போது கோயம்பேடில் உள்ள 2325 கடைகளில், இதுவரை 1596 கடை உரிமையாளர்கள் மட்டுமே வரி செலுத்தியிருப்பதாகவும், மேலும் 729 கடைகள் சுமார் ரூ.2.50 கோடி வரி செலுத்தவில்லை என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சென்னை மாநகராட்சியில், கடந்த 1998-ஆம் ஆண்டுக்கு பிறகு வரி மாற்றி அமைக்கவில்லை என்பது நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி கிருபாகரன், கடந்த 19 ஆண்டுகளாக வரியை மாற்றியமைக்காத போதும் பழைய வரியை கூட செலுத்ததாத 729 கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைத்துவிட்டு அதன் அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, 729 கடைகளில் 461 கடைகளின் உரிமையாளர்கள் சொத்து வரியை செலுத்தியதாகவும், இதன்மூலம் ரூ.1.51 கோடி வசூலாகியுள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் வரி செலுத்தாத 39 கடைகளை மூடி சீல் வைக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். அதேபோல, மீதமுள்ள கடைகளில் வரி வசூல் செய்ய ஒரு வார கால அவகாசம் வேண்டும் எனவும் மாநகராட்சி தரப்பில் கோரப்பட்டது.
இதனை ஏற்று அவகாசம் வழங்கிய நீதிபதி கிருபாகரன் , வழக்கு விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.