விழுப்புரத்திலிருந்து சென்னை எழும்பூர் வரை சீசன் டிக்கெட் வழங்க அனுமதிக்க வேண்டும் என தென்னக ரயில்வேக்கு, ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக ட்வீட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு:
திருச்சிராப்பள்ளியில் இன்று நடைபெற்ற தென்னக ரயில்வே திருச்சி கோட்டத்துக்குட்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களோடான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று எனது தொகுதிக்குட்பட்ட ரயில்வே தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தேன்.
தற்போதுள்ள 150 கி.மீ வரம்பை 160 கி.மீ ஆக பொது மேலாளர் தளர்த்தலாம் என்று ரயில்வே அமைச்சகம் அனுமதித்துள்ளது. அதைப் பயன்படுத்தி விழுப்புரத்திலிருந்து சென்னை எழும்பூர் வரை சீசன் டிக்கெட் வழங்க பொது மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் பகுதி ரயில்வே ஊழியர்கள் ஓய்வுபெற்ற ஊழியர்கள் மணக்குள விநாயகர் மருத்துவமனை வரையிலான 16 கி.மீ ரயிலில் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
இவை தவிர 11 கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக வழங்கினேன், என்று ரவிக்குமார் எம்.பி. அதில் குறிப்பிட்டுள்ளார்.