/tamil-ie/media/media_files/uploads/2023/05/seeman-3.webp)
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
சென்னை மீனம்பாக்கத்தில் விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் 2-வது பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 26 ம் தேதி முதல் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
மேலும், கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதால், 300வது நாளான இன்று ஏகனாபுரத்தில் உள்ள ஏரியில் இறங்கி 200க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, “புதிய வானூர்தி நிலையத்திற்கு எதிராக காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் மற்றும் பரந்தூர் உள்ளிட்ட 13 கிராம மக்கள் 300-வது நாளாகத் தொடர் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். தற்சார்பு வாழ்வியலை வேண்டும் உழைக்கும் மக்களை, வளர்ச்சி எனும் பெயரில் ஒடுக்கி, பன்னாட்டுப் பெரு முதலாளிகளின் இருப்பிற்காக மட்டுமே பணிபுரியும் ஆளும் அரசுகள், மக்களின் வலிமிகுந்த சொற்களை ஒரு பொழுதும் மதிப்பதில்லை.
இது ஏகனாபுரத்தின் சிக்கல் மட்டுமல்ல. இத்திட்டம் நிறைவேறினால் குடிநீர் தட்டுப்பாடும், வெள்ளநீர் அபாயமும், சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களையும் பாதிக்கும். பெரும் சூழலியல் அழிவும் நிகழும். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தினை ஆளும் திமுக, பாஜக அரசுகள் முழுவதுமாகக் கைவிடும் வரை நாம் தமிழர் கட்சி மக்கள் போராட்டத்திற்கு தொடர்ந்து வலு சேர்க்கும். இதன் துவக்கமாக ஜூன் 10, 2023 அன்று மாபெரும் ஆர்ப்பாட்ட வடிவில் காந்தி சாலை, காஞ்சியில் களம் காண்கிறோம். சூழலியல் அக்கறை மற்றும் மக்கள் நலம் கருத்தில் கொண்ட உறவுகள் அனைவரையும் எங்களுடன் கைகோர்க்கப் பேரழைப்பு விடுக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.