Naam Tamilar party coordinator Seeman Arrested: சீமான், சேலம்-சென்னை 8 வழிச்சாலை போராட்டம் எதிரொலியாக கைது செய்யப்பட்டார். இரவில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சீமான், சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இன்று (ஜூலை 18) சேலம் சென்ற சீமான் அங்கு சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து பேசினார். சேலம் மாவட்டம், பாறைப்பட்டி அருகே பூவாங்காடு பகுதியில் இந்த சந்திப்பு நடந்தது.
Naam Tamilar party coordinator Seeman Arrested near salem: சீமான், சேலம்-சென்னை 8 வழிச்சாலை தொடர்பாக மக்களை சந்தித்த காட்சி
சீமானுடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் பகல் 11.30 மணியளவில் சீமானை போலீஸார் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அவர் கைது செய்யப்பட்டு விட்டதாக நாம் தமிழர் கட்சியினர் கூறுகின்றனர்.
சேலம்-சென்னை பசுமை வழிச்சாலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே பல்வேறு போராட்ட வழக்குகளில் முன் ஜாமீன் பெற்று வந்த சீமான், நேரடி போராட்டங்களை தவிர்த்து வந்தார்.
‘நானும் உள்ளே போய்விட்டால், ஏற்கனவே கைதாகி சிறைகளில் இருக்கும் என் தம்பிகளை யார் வெளியே எடுப்பது?’ என ஒரு பேட்டியில் கேட்டார் சீமான். இந்த நிலையில் பொதுமக்களை சந்திப்பதாக கூறிச் சென்ற அவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சீமான் மீது அடுத்தடுத்து வழக்குகளை பாய்ச்சி சிறையில் வைக்க அரசு திட்டமிடுவதாக நாம் தமிழர் கட்சியினர் புகார் கூறி வருகின்றனர்.
Naam Tamilar party coordinator Seeman Arrested: சீமான் கைது தொடர்பான LIVE UPDATES:
7:00 PM : மாலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சீமானை சேலம் சிறையில் போலீஸார் அடைத்தனர். சீமான் கைதுக்கு எதிராக உரிய முறையில் அனுமதி பெற்று, ஜனநாயக முறையில் சட்டமன்றத் தொகுதி வாரியாக கட்சியினர் போராட்டம் நடத்த வேண்டும். மிகுந்த பொறுப்புணர்வுடன் கட்சியினர் நடந்து கொள்ள வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் வேண்டுகோள் அறிக்கை விட்டிருக்கிறார்கள்.
5:00 PM: சீமான் கைதுக்கு எதிராக போராடும் திட்டம் எதுவும் இல்லை என்றும், அதே சமயம் சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிராக தங்கள் போராட்டம் தொடரும் என்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
3:30 PM: சீமான் கைது செய்யப்பட்டபோது, போலீஸாரை பெண்கள் தடுத்து கதறினார்கள். எங்களிடம் குறை கேட்க வந்தது குற்றமா? என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
சீமான் கைது: போலீஸாரை தடுத்து கதறிய பெண்கள்
2:25 PM: இன்று மாலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சீமானை சிறையில் அடைக்க போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள். அப்போது சீமானுக்கு ஜாமீன் கேட்டு அவரது கட்சி வழக்கறிஞர்கள் முறையிட இருக்கிறார்கள்.
2:15 PM: சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்து மல்லூர் வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
Naam Tamilar party coordinator seeman arrested near salem:சீமான், சேலத்தில் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த காட்சி
1:30 PM: சீமான் கைதுக்கு எதிராக மாநிலத்தின் இதர பகுதிகளில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடலாம் என்கிற எதிர்பார்ப்பு இருப்பதால் பலத்த கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
1:00 PM: சீமான் ஏற்கனவே சேலம் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக போராடியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில் நிபந்தனை ஜாமீன் பெற்று சேலம் ஓமலூர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்த நிலையில் சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்ட மக்கள் சந்திப்பில் கைதாகியிருக்கிறார்.
Naam Tamilar party coordinator seeman arrested near salem:சீமான், சேலத்தில் நடத்திய மக்கள் சந்திப்பு
12:30 PM: சீமான் பகல் 11 மணியளவில் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டாரா, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுகிறாரா? என்பது குறித்து உடனடியாக போலீஸ் தரப்பில் கூறப்படவில்லை. எனினும் அவர் கைது செய்யப்பட்டுவிட்டதாகவே அதிகாரபூர்வமற்ற முறையில் போலீஸார் தெரிவித்தனர்.
Naam Tamilar party coordinator Seeman Arrested: சீமான் கைது தொடர்பான LIVE UPDATES: