பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை என்னை எதிர்த்து போட்டியிட்டு 1% ஓட்டு அதிகமாக வாங்க முடியுமா என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விட்டுள்ளார்.
அண்மையில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாடாளுடன்ற தேர்லில் பிரதமர் மோடி தமிழகத்தில் நின்றால் எனக்கு ஒரு விடிவு காலம் வரும். ஏன் என்றால் நான் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று கூறியிருந்தார்.
சீமான் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “சீமான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட்டு கொள்ளட்டும் தோற்கத்தானே போகிறார்” என்று கூறினார்.
அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “சரி நான் எங்கே நின்றாலும் தோற்றுப் போய்விடுவேன். தம்பி எங்கே நின்றாலும் வெற்றி பெற்றுவிடுவாரா? அல்லது பா.ஜ.க வெற்றி பெற்றுவிடுமா? நானாவது ஒரு சிங்கமாக, நேர்மையாக துணிவாக பிரபாகரன் மகனாக நான் நிற்கிறேன். தனியாக நிற்பேன். என்னோடு யார் வேண்டுமானாலும் மோதிக்கொள்ளுங்கள். நீங்கள் அப்படி நிற்க முடியுமா? நாட்டை பத்தாண்டுகள் ஆண்டுவிட்டீர்கள். பெரிய கட்சி என்று சொல்கிறீர்கள், வாங்க தனியாக தமிழ்நாட்டில், நீங்களும் நானும் போட்டி போடுவோம். என்னைவிட ஒரு ஓட்டு கூட வாங்கி காட்டுங்க. இல்லை நான் வாங்குகிற ஓட்டைவிட 1 விழுக்காடு ஓட்டு அதிகமாக வாங்கி காட்டுங்கள். எதற்கு வெட்டிப் பேச்சு. நீங்க நடையாக நடந்து எடப்பாடி பழனிசாமி வீட்டில்தான் போய் நிறுத்துவீர்கள். அவர் முதுகுக்கு பின்னால் நிற்பீர்களா? இல்லை ஒரு அடி முன்னால் நிற்பீர்களா? அவர் முதுகுக்கு பின்னால்தான் நிற்கப் போகிறீர்கள்.
நான் 40 இடத்திலும் போட்டி போடுவேன். நீங்கள் எத்தனை இடத்தில் போட்டி போடுவீர்கள். வேட்பாளர் வைத்திருக்கிறீர்களா? போட்டி போடுவீர்களா? அதிகபட்சம் போட்டியிட்டால் 7 இடம் அல்லது 8 இடம் போட்டிபோடுவீர்கள். அதுவே எடப்பாடி பழனிசாமியிடம் 7-8 முறை நடையாக நடந்து கெஞ்சி வாங்கனும். அதுவே அவர் கொடுப்பாரா என்று யோசிக்கனும். பா.ஜ.க-வுக்கு எடப்பாடி பழனிசாமி ஒதுக்குகிற சீட்டு எல்லாமே வீண் தானே, அது மிகப்பெரிய பின்னடைவை அவருக்கும் சேர்த்து கொடுக்கும்.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“