சென்னை அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையோரம் வீடுகளை இழந்த மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய சீமான் அனகாபுத்தூரில் வீடுகள் அகற்றும் முயற்சியை கைவிடாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கூறினார்.
சென்னை அனகாபுத்தூரில் அடையாறு கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, வீடுகள் அகற்றும் பணி 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. அனகாபுத்தூரில் வீடுகளை இழந்த மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய சீமான் அனகாபுத்தூரில் வீடுகள் அகற்றும் முயற்சியை கைவிடாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கூறினார்.
அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையோரம் தாய் மூகாம்பிகை நகர், ஜவஹர்லால் நேரு தெரு, டோபிகானா தெரு, சாந்தி நகர்உள்ளிட்ட தெருக்களில் சுமார் 750 வீடுகள் உள்ளன. அவற்றில் ஆற்றின்கரைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வீடுகள், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்ரமித்துக் கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், வீடுகளை இழந்த பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அனகாபுத்தூரில் வீடுகளை இழந்த பொதுமக்களை நாம் தமிழர் கட்சியின்தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல்கூறினார். பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அடையாறு ஆற்றின் கரையைப் பலப்படுத்துவதாகக் கூறி சென்னை அனகாபுத்தூர் பகுதியில் அமைந்துள்ள 750 வீடுகளை இடித்து, அங்கு வசிக்கும் 3500க்கும் மேற்பட்ட மக்களை வலுக்கட்டாயமாக வெளியற்ற திமுக அரசு முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது. குடியிருப்புகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கிப் போராடிய பூர்வகுடி மக்களின் மீது காவல்துறை மூலம் கடுமையாக அடக்குமுறைகளை ஏவி தி.மு.க அரசு கைது செய்திருப்பது சிறிதும் மனிதநேயமற்ற கொடுஞ்செயலாகும்.
அடையாறு ஆற்றினை 110 அடியிலிருந்து 360 அடியாக அகலப்படுத்தும் பொருட்டு ஆற்றங்கரை ஒரு புறத்தில் அமைந்துள்ள ஏழை எளிய மக்களின் குடியிருப்புகளை அகற்ற முயலும் திமுக அரசு, கரையின் மறுபுறத்தில் உள்ள பெருமுதலாளிகளுக்கு சொந்தமான இடங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? அவையெல்லாம் ஆக்கிரமிப்பு இல்லையா? ஆற்றங்கரையின் ஓரத்தில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரும் மதில் சுவர்களை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற தி.மு.க அரசிற்குத் துணிவிருக்கிறதா?
இப்பகுதி மக்களின் வாழ்விடங்களை ஆக்கிரமிப்பு என்று கூறி இடித்து தரைமட்டமாக்குவது மிகப்பெரிய கொடுஞ்செயல். பல இடங்களில் ஆக்கிரமிப்பு என்கிற குற்றச்சாட்டை வைத்து வீடுகளை இடித்து, மக்களை வெளியேற்றி, செம்மஞ்சேரி போன்ற நகரின் வெளிப் பகுதிகளுக்கு அனுப்பிவருகின்றனர். பல தலைமுறைகளாக வாழ்ந்த மக்களைத் தலைநகரில் இருக்க விடக் கூடாது என்பதே இதன் நோக்கமாக இருக்கிறது. பொதுமக்கள் வசிக்கும் வீடுகள் ஆக்கிரமிப்பு என்றால், அனகாபுத்தூர் பேருந்து நிலையமும் ஆக்கிரமிப்பு இடம் தானே? அதை ஏன் அகற்றவில்லை.
ஆக்கிரமிப்பை ஆரம்பத்திலேயே தடுக்காமல் இத்தனை வருடமாக மின் இணைப்பு, வாக்காளர் உரிமை, எரிவாயு இணைப்பு வழங்கிவிட்டு, வீட்டு வரியும் பெற்றுக்கொண்டு, தற்போது ஆக்கிரமிப்பு என்றால் யாருடைய தவறு.
இங்கு வசிக்கும் அனைத்து மக்களும் அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள். இந்த நிலைமையில் இருக்கும் மக்களை மாநகரின் வெளிப்பகுதிக்கு அனுப்பிவிட்டால் அவர்கள் என்ன செய்வார்கள். இது அவசியமற்ற செயல்.
மதுரை உயர் நீதிமன்றம், வள்ளுவர் கோட்டம், எம்எம்டிஏ அலுவலகம், திருவள்ளூர் நீதிமன்றம் எனஅனைத்தும் ஏரியில் தான் கட்டப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் அகற்ற நீதிமன்றம் உத்தரவிடுமா? எனவே இது ஏற்புடையதல்ல. இந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும். இல்லையென்றால் நான் மீண்டும் வந்து போராட்டத்தில் ஈடுபடுவேன்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“