/tamil-ie/media/media_files/uploads/2023/05/Seeman-1.jpeg)
மணிப்பூர் பெண்கள் வன்கொடுமைக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில் குகி பழங்குடி பெண்கள் இருவர் பெரும்பான்மை மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்களால் ஆடையின்றி சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு அதிர்ச்சியையும், கடும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது.
ஒரு பழங்குடி பெண்ணை இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஆக்கிவிட்டதாக பெருமை பேசிய பாஜக, இரண்டு பழங்குடி பெண்களுக்கு நிகழ்த்தப்பட்டுள்ள மனச்சான்றற்ற அநீதிக்கு என்ன பதில் கூறப்போகிறது?
கண்முன்னே சக மனிதர்களுக்கு நிகழ்த்தப்படும் சிறிதும் மனித தன்மையற்ற இதுபோன்ற கொடுமைகளை அனுமதித்துவிட்டு, நிலவுக்கு செயற்கோள் அனுப்பியதை அறிவியல் வளர்ச்சி என்று இந்த நாகரிக நாடு கொண்டாடுவது வெட்கக்கேடானது. இதுதான் மோடி கண்டுபிடித்த புதிய இந்தியாவா?
இந்தியாவில் மத, சாதி பாகுபாடுகள் இல்லையென்று கூசாமல் பொய் பேசிய பிரதமர் மோடி இப்போது வாய் திறப்பாரா?
மல்யுத்த வீராங்கனைகள் முதல் பழங்குடியின பெண்கள் வரை பாஜக ஆட்சியில் நடைபெறும் பாலியல் கொடுமைகள் உலக அரங்கில் இந்தியாவுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
பாரதம், பண்பாடு என்றெல்லாம் பிதற்றும் பாஜக ஆளும் மாநிலத்தில் நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல; பாரதத் தாய் தான்.
பழங்குடியின மக்களுக்கு எதிராக தொடர்ந்து கட்டுக்கடங்காத கலவரம் நடைபெற்று வரும் மணிப்பூர் மாநிலத்தில் உடனடியாக குடியரசு தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும்", என்று அவர் கூறியுள்ளார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.