தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், தே.மு.தி.க. , வி.சி.க., ம.தி.மு.க., பா.ம.க., த.வெ.க. நாம் தமிழர் உள்பட பல்வேறு கட்சிகள் தற்போதே தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன.
இந்நிலையில், கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சாமி துரை தலைமை தாங்கினார். இதில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று உறுதிமொழியை எடுத்தார். மேலும், பாரதிதாசன் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இக்கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீமான் கலந்து கொண்டார். அப்போது, தேர்தல் கூட்டணி குறித்து சீமானிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு நாங்கள் யாருடன் கூட்டணி வைக்கலாம்? என்று செய்தியாளரிடமே சீமான் திருப்பிக்கேட்டார். அதற்கு , நமது மனதிற்கு ஏற்றவர்களோடு கூட்டணி வைக்கலாம் என செய்தியாளர் பதில் அளித்தார். "மக்களாட்சி என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அதிகாரம் மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர் மக்களாட்சியில் தலையிடுவது என்பது நல்லது அல்ல
சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், இடைத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல் போன்றவற்றில் தனித்து நின்று நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றுள்ளது. நாங்கள் கூட்டணிக்காக தேர்தல் அரசியலை நம்பி இல்லை. மக்கள் அரசியலை மட்டுமே நாங்கள் நம்பி இருக்கிறோம். ஊழல் , லஞ்சத்தை ஒழிக்க நினைக்கிறோம். எந்த கட்சியுடன் சேர்ந்து ஒழிக்கலாம். ஊழல், லஞ்சம் இல்லாத நேர்மையான நிர்வாகத்தை எந்த கூட்டணியில் சேர்ந்து கொடுக்கலாம்? ஆறு, ஏரி, மலை, மணல், காடு இவற்றை காப்பாற்ற நினைக்கிறோம். அள்ளி சாப்பிடும் நபர்களே அதிகாரத்தில் உள்ள நபர்களாக இருக்கிறார்கள். எந்த கூட்டணியுடன் சேர்ந்து நிற்கலாம். நேர்மைக்கும், உண்மைக்கும் இருபக்கமும் பஞ்சம். அதனால் நாங்கள் மக்களுடனே தஞ்சம். கூட்டணிக்கு நான் வரவில்லை' என்றார். சுதந்திரத்திற்காக மட்டுமே நாங்கள் போராடுவோம். நிச்சயமாக 2026 தேர்தலில் தனித்து நிற்போம்" எனக் கூறினார்.