நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலையில், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய 8 மாவட்ட நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகிகளுடன் திருச்சியில் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்க வந்த சீமான் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்; 13 ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட கே.என்.ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை நாங்கள் ஆட்சிக்கு வந்து தான் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. திமுக ஆட்சியில் இருந்தும் திமுகவின் முதன்மைச் செயலாளரின் சகோதரர் கொலை வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. அந்த வகையில் தான் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு இன்று இருக்கிறது. இதில் இருந்து தமிழ்நாட்டில் சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்று யோசித்துப்பார்க்க வேண்டும்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு, கொடநாடு கொலை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவற்றை, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விசாரிப்போம் என்று சொன்னவர்கள் ஆட்சிக்கும் வந்தார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனையை இதுவரை பெற்றுக் கொடுக்கவில்லை.
இதில் காலம் கடத்தி, அரசுக்கும், அதிகாரத்திற்கும் எது தேவையோ அதை மட்டும் செய்து வருகிறார்கள். மற்றவற்றை மூடி மறைத்து விடுகிறார்கள். அவர்களுக்கு தேவை என்றால் ராமஜெயம் கொலை வழக்கை கண்டுபிடிப்பார்கள். டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்க துறையினர் சோதனை நடத்தினார்கள். அதில் உண்மையில் தவறு நடந்திருக்கிறதா? இதன் மீது எதேனும் நடவடிக்கை உண்டா? இவை எதுவும் வெளியே தெரிவதில்லை.
பெரியார் பற்றி நான் பேசியதற்கு 100க்கும் மேற்பட்ட இடங்களில் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை ஒரே நீதிமன்றத்தில், ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என கேட்கிறோம். அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நீதிமன்றம், தம்பி செந்தில் பாலாஜியின் வழக்குகளை ஒரே நீதிமன்றத்தில் ஒன்றாக விசாரிக்கக் கூடாது என்ற தடையை நீக்குகிறது. இதன்மூலம் நீதிமன்றம் தனது நம்பிக்கையை இழந்து வருகிறது.
நாம் தமிழர் கட்சி ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி. தேர்தலில் 36 லட்சம் வாக்குகளை பெற்ற கட்சி. அடுத்த முறையும் தேர்தலில் போட்டியிடுவோம்.
எங்களை 'C' வாக்காளர் கருத்து கணிப்பில் எங்களது கட்சி பெயர் கூட இல்லை. இது என்ன கருத்து கணிப்பா? அல்லது கருத்து திணிப்பா?கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க நாங்கள் அரசியல் வியாபாரிகள் அல்ல. நாங்கள் அரசியல் போராளிகள். நாங்கள் அரசியல் வணிகம் செய்யவில்லை. நாங்கள் அரசியல் மறுமலர்ச்சியை செய்ய வந்தவர்கள். வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தனித்து போட்டியிடுவோம். வரும் சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. தனித்து போட்டியிட்டு தி.மு.க.வை வீழ்த்துவேன் என்ற விஜய் நிலைப்பாட்டை வரவேற்கிறேன். நான் பிரபாகரனை போல தனித்தே நின்று போட்டியிடுவேன். நான் புலி போன்றவன் தனித்தே நின்று போட்டியிடுவேன்.
ஆனால், கூட்டணி வைத்தால்தான் எதிரியை தேர்தலில் வெல்ல முடியும் என்பது சட்டமா அல்லது ஏதேனும் மரபா?.. கூட்டணி இல்லாமல் எப்படி என கேட்பவர்கள், கொள்கை இல்லாமல் எப்படி என கேட்பதில்லை.
படை சேர்த்துக்கொண்டு தேர்தலை சந்திப்பவன் அல்ல நான். கூட்டத்தில் ஒரு ஆளாக போட்டியிட துணிவோ, வீரமோ தேவையில்லை, தனித்து நிற்கவும் தான் துணிவும் வீரமும் தேவை. எதிரியை தீர்மானித்து விட்டு தான் களத்தில் இறங்கி உள்ளோம். எந்த குழப்பமும் இல்லை தடுமாற்றமும் இல்லை. இன்னும் 4 மாதத்தில் யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பது தெரிந்து விடும். தேர்தலில் நாங்கள் வாங்கப்போவது தி.மு.க., அ.தி.மு.க. ஓட்டு அல்ல, மக்களின் ஓட்டு தான்.
தம்பி சவுக்கு சங்கர் வீட்டில் குற்றம் நடந்தது எல்லோருக்கும் தெரியும். குற்றம் செய்தவர்களையும் எல்லோருக்கும் தெரியும். அப்படி இருக்கையில் சிபிசிஐடி விசாரணை எதற்கு? ஆட்சியாளர்களுக்கு ஆதரவானவர்களை பூனை தனது குட்டியை கவ்வுவது போலவும், எதிரானவர்கள் என்றால் பூனை எலியை கடிப்பது போலவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இதில் இருந்து ஆட்சியின் தரம் தெரிகிறது. சாக்கடை கழிவு என்பதை காண்பிப்பதற்காக அதைக் கொண்டு போய், சவுக்கு சங்கர் வீட்டில் கொண்டு போய்கொட்டி இருக்கிறார்கள்.
அங்கு வீட்டில் இருந்த வயதானவரை கெட்ட வார்த்தைகளில் பேசுகிறீர்கள். அந்த குற்றவாளிகள் உடனே பிணையில் விடுவிக்கப்படுகிறார்கள். குற்றவாளிகள் கையில் அதிகாரம் இருப்பதால், நாம் தினமும் புலம்பி கொண்டிருக்கிறோம். கள்ள சாராயம் காய்சியதில் 67 பேர் மரணத்துக்கு காரணமானவர்களை காட்டிலும், சங்கிலித் திருட்டு பெரிய குற்றமல்ல. சங்கிலி திருடனை சுட்டுப் பிடிக்கக் கூடிய வகையில் அது பெரிய குற்றமல்ல. குடித்துவிட்டு பாட்டிலை கொடுத்தால் பத்து ரூபாய், பாடையில் படுத்தால் 10 லட்சம் ரூபாய். இது தான் திராவிட மாடல் கொள்கை எனப்பேசினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்