நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில் திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாலாஜி, சீமான் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில், சீமான் சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பதால் இன்று மாலை வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது எனக் கூறி சீமான் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் நீதிபதி முன்பு நேரில் ஆஜராகி வக்காலத்து தாக்கல் செய்தனர். இந்த வக்காலத்தை பரிசீலித்த நீதிபதி, நாளை சீமான் தவறாது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வெளியே வந்த டி.ஐ.ஜி வருண்குமார் கூறுகையில்; ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் ஆஜராகிறேன். நீதிமன்றத்தில் இன்றும் ஆஜரானேன். அடுத்து எப்போது ஆஜராக வேண்டும் என தெரிவிக்கின்றனரோ அப்போது ஆஜராவேன் என தெரிவித்தார்.
தொடர்ந்து வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது; வழக்கு விசாரணைக்கு வந்தது இன்று சீமான் ஆஜராக வேண்டிய நிலையில் அவர் சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ளுவதால் இன்று ஆஜராகவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். அதனைப் பரிசீலனை செய்த நீதிபதி கடும் ஆட்சேபனைக்கு இடையில் அதனை ஏற்றுக்கொண்டு நாளை கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
நாளை காலை நீதிமன்ற வேலை நேரம் 10:30 மணியளவில் அந்த நேரத்தில் அவர் ஆஜராக வேண்டும் நாளை வரவில்லை என்றால் நீதிமன்றம் சட்டத்துக்கு உட்பட்டு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வார்கள்.
/indian-express-tamil/media/post_attachments/0f8a5563-a12.jpg)
அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். ஆனால் அவர் நீதிமன்றம் ஆஜர் ஆகுவதை விடுவித்துக் கொண்டு மற்ற விழாக்களுக்கும் செல்கிறார். பாடல் எழுதவும், சினிமா பார்க்கவும், மற்ற பொழுதுபோக்கு சம்பந்தமான விழாக்கள், கல்லூரி விழாக்களுக்கு செல்கிறார். ஆனால் நீதிமன்றத்தை மதிப்பதே கிடையாது. நீதிமன்றத்தின் மாண்பு என்னவென்பது அவருக்கு தெரியாது. என் மீது என்ன வழக்கு இருக்கிறது எத்தனை வழக்கு இருக்கிறது நான் பார்த்துக் கொள்கிறேன், அதோட இது ஒன்றுதானே என கூறுகிறார். அவர் நீதிமன்றத்தை மதிப்பதே இல்லை ஏன் என்பதை அவர்கள் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.
முன்னதாக, தன்னையும், தனது குடும்பத்தினரையும் சீமான் தூண்டுதலின்பேரில், நாம் தமிழா் கட்சியினர் சமூக ஊடகங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் சித்தரித்து கருத்துகள் பதிவிடுவதாகவும், தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சீமான் முயற்சிப்பதாகவும் புகார் கூறி, திருச்சி 4-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் திருச்சி டி.ஐ.ஜி வருண்குமார் வழக்குத் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்